ETV Bharat / state

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வுக்கு முன்னரே 50ஆயிரம் இடங்கள் காலி!

author img

By

Published : Sep 28, 2020, 5:38 PM IST

Updated : Sep 28, 2020, 10:21 PM IST

பொறியியல் மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

17:35 September 28

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே இந்தக் கல்வி ஆண்டில் 50 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது என கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே இந்தக் கல்வி ஆண்டில் 50 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது என கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை: பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று (செப்.28) வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது, “முதல் 10 இடங்களில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி சுஷ்மிதா 200க்கு 199. 67 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் இரண்டாமிடத்தையும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காவியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாறுபாடு இருந்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தில் இரண்டு நாள்களுக்குள் தெரிவித்தால் சரி செய்து தரப்படும்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 463 மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தினர். இவர்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 88 மாணவர்கள் மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர்.

இவர்களில் தகுதியான மாணவர்களான ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் 791 மாணவர்களுக்கு ரேண்டம் எண் பயன்படுத்தி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினரில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் ஆயிரத்து 533 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆதிதிராவிடர் அருந்ததியருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் நிரம்பாத காலி இடத்திற்கு ஆதிதிராவிடர் ஒதுக்கீடு மாணவர்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்தாண்டு கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.

கடந்தாண்டு 481 கல்லூரிகள் இருந்தன. இந்தாண்டு 461 கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு 27 கல்லூரிகள் மூடுவதற்கான அனுமதி கேட்டுள்ளது. 8 கல்லூரிகள் புதிதாக திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி வருகிறது. பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்குச் சென்று வேலை தேடுவதை விட தமிழ்நாட்டிலேயே அவர்கள் வேலையை தருபவர்களாக உருவாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்தாண்டு தனியார் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்விற்கு ஒப்படைத்த இடங்கள் மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் உள்ளன. ஆனால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கவிருக்கின்றனர். இதனால் கலந்தாய்விற்கு முன்னரே 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது.

மாணவர்கள் கலந்தாய்விற்கு அதிக அளவில் கலந்து கொள்ளாமல் இருந்தால் மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated :Sep 28, 2020, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.