சென்னை: இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை பட்டினபாக்கத்தில் (ஜன.10) தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இவர்களுக்கு முன்னதாக ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தடுப்பூசி அளிக்கப்பட்ட பின்னர் பத்து நிமிடம் தொடர்ந்து கண்காணித்துப் பார்த்திருந்து பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்ற பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ஜன.11) பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
தமிழ்நாட்டில் 35.46 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் உள்ளனர். 9.78 லட்சம் முன்களப் பணியாளர்கள், 5.65 லட்சம் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ள 20.3 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க : நாட்டில் 2.50 லட்சம் பேருக்கு கரோனா!