ஒமைக்ரான் சாதாரண சளி அல்ல.. நாட்டில் 2.50 லட்சம் பேருக்கு கரோனா!

author img

By

Published : Jan 13, 2022, 9:36 AM IST

Updated : Jan 13, 2022, 4:34 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புகள் 2 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கிவருகின்றன.

டெல்லி : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கோவிட் பாதிப்புகள் குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், “கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேருக்கு கரோனா பாதிப்புகள் உள்ளன. மேலும் தினசரி பாதிப்பும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 2,47,417 புதிய கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 84 ஆயிரத்து 825 பேர் சிகிச்சைக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மீட்பு விகிதம் தற்போது 95.59 சதவீதமாக உள்ளது. தற்போது செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 17 ஆயிரத்து 531 ஐ எட்டியுள்ளது.
அதே நேரத்தில் தினசரி நேர்மறை விகிதம் 13.11% ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் பாதிப்புகளின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 488 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 380 கோவிட்-19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 35 ஆக உள்ளது” எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை (ஜன.11) பதிவான 34 ஆயிரத்து 424 கரோனா பாதிப்பாளர்களில் இருந்து 35 சதவீதம் அதிகரித்து, தற்போது அதிகபட்சமாக 46 ஆயிரத்து 723 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மும்பையில் மட்டும் 16 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் டெல்லியில் 27 ஆயிரத்து 561 புதிய பாதிப்புகளும், கேரளாவில் 12 ஆயிரத்து 742 புதிய பாதிப்புகளும், மீதமுள்ள பாதிப்புகள் மற்ற மாநிலங்களிலும் பதிவாகியுள்ளன.
ஒமைக்ரான் மாறுபாட்டைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் 1,367 பாதிப்புகளும், ராஜஸ்தானில் 792 பாதிப்புகளும், டெல்லியில் 549 பாதிப்புகளும், கேரளாவில் 486 பாதிப்புகளும், கர்நாடகாவில் 479 பாதிப்புகளும், மேற்கு வங்காளத்தில் 294 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
இதுவரை நடத்தப்பட்ட 69.73 கோடி மொத்த சோதனைகளில், நாட்டில் தினசரி நேர்மறை விகிதம் 13.11 சதவீதம் பதிவாகியுள்ளது. மேலும், வாராந்திர நேர்மறை விகிதம் 10.80 சதவீதமாக உள்ளது. கோவிட்-19 தடுப்பூசி நிலையைப் பொறுத்தவரை, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 154.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதன்மையாக ஒமைக்ரான் மாறுபாட்டால் தூண்டப்பட்ட கோவிட் -19 வழக்குகளின் மிகப்பெரிய எழுச்சிக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் வியாழக்கிழமை (ஜன.13) மாலை 4:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நிலைமையை மதிப்பாய்வு செய்ய உள்ளார்.
முன்னதாக புதன்கிழமை, நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால், “கரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாட்டால் ஏற்படும் தொற்றுநோயை சாதாரண ஜலதோஷமாகக் கருதக்கூடாது, அதை மக்கள் அதை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று எச்சரித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

Last Updated :Jan 13, 2022, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.