ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 8:10 PM IST

Chennai airport
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்

Chennai airport: துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புடைய தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை: துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று(டிச.9) காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக, சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், விமான நிலைய ஊழியர்கள் விமானத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, விமானத்தின் சீட் ஒன்று தூக்கிக்கொண்டு இருந்தது. அதை விமான நிலைய ஊழியர்கள் சரி செய்த போது, சீட்டுக்கு கீழே பார்சல் ஒன்று இருப்பது தெரிய வந்தது. உடனடியாக, விமான நிலைய மேலாளருக்குத் தகவல் தெரிவித்தனர். பின், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் பார்சலை ஆய்வு செய்தனர். அந்த பார்சலில், பிளாஸ்டிக் பவுச்சுக்குள் தங்கப் பசை இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், விமான நிலைய சுங்கத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் படி, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 1.25 கிலோ எடையுள்ள தங்கப் பசையைப் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.73 லட்சம் ஆகும்.

பின்னர், சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, துபாயிலிருந்து விமானத்தின் மூலம் சென்னைக்குத் தங்க பசை பார்சலை கடத்தி வந்த நபர் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (டிச.9) மதியம் வந்தது. அதில், வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கப் பெண் பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பெண் சுங்க அதிகாரிகள், அந்தப் பெண் பயணியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாகப் பரிசோதித்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பெரிய தங்கச் செயின்களை பெண் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த தங்க செயின்களின் மொத்த எடை 473 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.26.27 லட்சம் ஆகும். பின்னர், செயின்களைப் பறிமுதல் செய்து, பெண் பயணியைக் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் நேற்று(டிச.9) ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் ரூ.1 கோடி மதிப்புடைய 1.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருப்பத்தூர் நகர காங்கிரஸ் தலைவருக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.