ETV Bharat / state

'தயிர்' to 'தஹி' - ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி மொழியா? - மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை!

author img

By

Published : Mar 29, 2023, 9:24 PM IST

CHE
தயிர்

ஆவின் பாக்கெட்டில் 'தயிர்' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக இந்தி மொழியில் 'தஹி' என்று குறிப்பிட வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும், தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்தும் விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை: மத்திய அரசு இந்தி மொழியைத் திணிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆவின் பாக்கெட்டில் 'தயிர்' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக இந்தி மொழியில் 'தஹி' என்று குறிப்பிட வேண்டும் என மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், "பால் பாக்கெட்டில் தயிர் என்று எழுதுவதற்குப் பதிலாக 'தஹி' என்று எழுத வேண்டும் எனக் கூறி, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தது. இதனை ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தயிர் என தமிழிலும், Curd என ஆங்கிலத்திலும் மட்டுமே அச்சிடுவோம் என்று தெரிவித்துவிட்டோம். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். அவர்களும் மொழிப்பற்று காரணமாக கடுமையாக எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். இந்தி திணிப்பு என்பதால் தமிழக அரசு இதனை ஏற்கவில்லை" என்று கூறினார்.

மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என்று கடுமையாக சாடியுள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! - மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition. குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்" என்று கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தயிருக்கு தஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா? நடுவண் அரசின் இந்தித் திணிப்பை தமிழக அரசு ஏற்கக் கூடாது. ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது என்றும், தஹி என்ற இந்திச் சொல்லைத்தான் எழுத வேண்டும் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கட்டுப்பாடு விதித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நடுவண் அரசின் இந்த மறைமுகமான இந்தி திணிப்பு கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக எந்த நெருக்கடிக்கும் ஆவின் நிறுவனம் பணியக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. காரணம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு நீண்ட வரலாறு உள்ளது.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு : 1938ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளி பாடப் புத்தகத்தில் இந்தி மொழி கட்டாயம் என்று உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு தமிழ் உணர்வாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். 1939ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் நடராஜன், தாளமுத்து ஆகியோர் சிறையிலேயே உயிரிழந்தனர். இந்தி திணிப்பை எதிர்த்து உயிரிழந்ததால் நடராஜன், தாளமுத்து ஆகிய இருவரும் மொழிப்போர் தியாகிகள் என இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றனர். இவர்களின் இருவரின் மறைவை அடுத்து 1940ஆம் ஆண்டு போராட்டம் கடுமையானதால் இந்தி மொழி கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

1963ஆம் ஆண்டு இந்தி ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், 1965-க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அண்ணாதுரை கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். எதிர்ப்புகளை மீறி 1963ஆம் ஆண்டு அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சியில் கீழப்பழுவூர் சின்னச்சாமி என்பவர் 1964ஆம் ஆண்டு தீக்குளித்தார். ஆட்சி மொழிச் சட்டம் அமல்படுத்துவதற்கான காலம் நெருங்கிய நிலையில், 1965ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

திருச்சியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாதுரை உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாதன், முத்து, சாரங்கபாணி, வீரப்பன் ஆகியோர் தீக்குளித்து உயிரிழந்தனர். இந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கியக் காரணமாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் அமைந்தது.

மீண்டும் இந்தி திணிப்பு: கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இந்தி திணிப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள், மத்திய அரசுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்தி மொழியை திணிப்பதற்காக பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, புதிய கல்வி கொள்கை என்ற புதிய நடைமுறையில் மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் எப்போது இந்தி திணிப்பு சர்ச்சை எழுந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் 'இந்தி தெரியாது போடா' என தங்கள் பாணியில் எதிர்ப்பு தெரிவித்து விடுவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் என்று திமுகவும், அதிமுகவும் தற்போது வரை கூறிக்கொண்டு வருகின்றன.

அதேபோல், தற்போது ஆவின் நிறுவனத்தில் இந்தியைத் திணிப்பது போல, மத்திய அரசும் மறைமுகமாக இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாக தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: S.E.T.C பேருந்துகளில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 50% கட்டணச் சலுகை - வெளியான சூப்பர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.