ETV Bharat / state

S.E.T.C பேருந்துகளில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 50% கட்டணச் சலுகை - வெளியான சூப்பர் அறிவிப்பு!

author img

By

Published : Mar 29, 2023, 8:44 PM IST

அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் ஒரு காலாண்டு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்புச் சலுகையாக ஆறாவது பயணம் முதல் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என அத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், ''அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒரு காலாண்டு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, சிறப்பு சலுகையாக, அடுத்த தொடர் பயணங்களுக்கு அதாவது ஆறாவது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத் பேருந்துகளுக்கும் பொருந்தும்'' எனக் கூறினார்.

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:

*அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்கு என தனியாக நான்கு இருக்கைகள் ஒதுக்கப்படும்.

* அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

* அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் உள்ள பணியாளர்களுக்கு ஓய்வு அறைகளுக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் நகரில் புதியப் பேருந்து பணிமனை ரூபாய் 3.55 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும் ஆவடி பேருந்து பணிமனை ரூபாய் 10.76 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* பாடியநல்லூர் பேருந்துப் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.43 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இளைஞர்களுக்கான வர்த்தக வாய்ப்புகள்

* அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒரு காலாண்டு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, சிறப்பு சலுகையாக, அடுத்த தொடர் பயணங்களுக்கு அதாவது ஆறாவது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத் பேருந்துகளுக்கும் பொருந்தும்.

* அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிமனை அளவில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

* அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

* தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலத்தினை பிரித்து ஆலங்குளம் தாலுகாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை பிரித்து ராஜபாளையம் தாலுகாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ரூபாய் 43 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* பொதுமக்கள் நலன் கருதி அரசின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய மொத்த 145 அலுவலகங்களில், ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு 145 எண்ணிக்கையில் இலகு ரக மோட்டார் கார் வாகனங்கள் 625 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் ரூபாய் ஆயிரம் லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூபாய் 5000 தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக தொகை 5000 ரூபாய் வழங்கப்படும்.

* ஆதார் அட்டை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வராமலேயே சேவைகளை குடிமக்களுக்கு வழங்கப்படும்.

* போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்பின் மூலமாக தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: மதுபோதையில் அநாகரிகமாக புகைப்பிடித்து போலீசார் முகத்திற்கு நேராக ஊதிய நபரிடம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.