ETV Bharat / state

படிக்கவில்லை எனக் கூறி ஜாமீன் மனு.. 'படிக்காதவர் பெயரில் 10 போலி நிறுவனம்?' - சுரானா வழக்கில் சரமாரி கேள்வி!

author img

By

Published : Dec 3, 2022, 5:52 PM IST

Updated : Dec 3, 2022, 6:01 PM IST

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு - பங்குதாரருக்கு ஜாமின் மறுப்பு
ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு - பங்குதாரருக்கு ஜாமின் மறுப்பு

சென்னையில் ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் கைதான போலி நிறுவன பங்குதாரரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்ட சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், ஐடிபிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகளிடம் இருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்பிஐ வங்கியிடமிருந்தும் பெற்ற 4,000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா மற்றும் போலி நிறுவன பங்குதாரரான ஆனந்த் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பின்னர் இவ்வழக்கு தொடர்பாக நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் பங்குதாரர் ஆனந்த், ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (டிச.3) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரர் இந்த வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் இந்த முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனுதாரர் பெரிய அளவில் படிக்கவில்லை என்பதால், நிறுவனத்தின் வரவு - செலவு குறித்து அவருக்கு எதுவும் தெரியாது' என வாதிட்டார்.

பின்னர் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஆனந்துக்கு ஜாமின் வழங்க கூடாது’ என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ’அதிகம் படிக்கவில்லை என கூறும் மனுதாரர், பத்து போலி நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும் மற்றும் பங்குதாரராகவும் இருந்துள்ளார். அதேநேரம் ஆனந்துக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே மனுதாரர் ஆனந்துக்கு ஜாமீன் வழங்க முடியாது. மேலும் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாது - உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

Last Updated :Dec 3, 2022, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.