ETV Bharat / state

தி.நகர் நகைக்கடையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை- இருவரிடம் விசாரணை

author img

By

Published : Oct 27, 2020, 7:41 AM IST

சென்னை:  தியாகராயநகர் மொத்த நகைக்கடையில் 4.5 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த விவகாரம் தொடர்பாக, இரண்டு பேரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
நாலரை கிலோ தங்கம் கொள்ளை சம்பவம்: செல்ஃபோன் சிக்னல் மூலம் கைது செய்த காவல்துறையினர்...
நாலரை கிலோ தங்கம் கொள்ளை சம்பவம்: செல்ஃபோன் சிக்னல் மூலம் கைது செய்த காவல்துறையினர்...

சென்னை தியாகராயநகர் மூசா தெருவில் ராஜேந்திரகுமார் என்பவருக்குச் சொந்தமான மொத்த நகைக்கடையில், கடந்த 21ஆம் தேதி கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இதில் சுமார் 4.5 கிலோ தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், ஐந்து உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, முகக்கவசம், கையுறை அணிந்து கொண்டும், கொள்ளையன் இரும்பு ராடு ஒன்றை எடுத்துச் சென்று கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

கடையில் உள்ள பையை பயன்படுத்தி, நகைகளை எடுத்துச் சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வீட்டில் நுழைந்த கொள்ளையன், அதிகாலை நகைகளை எடுத்துக் கொண்டு மக்களோடு மக்களாக கலந்து எடுத்துச் சென்றதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இவ்வழக்கில் கொள்ளையனின் கைரேகை எதுவும் நகைக்கடையில் பதிவாகவில்லை என்பதால் விசாரணையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் கொள்ளை நடந்த நேரத்தின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது திருவள்ளூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு அழைப்புகள் வந்தது தெரியவந்தது.

யார் யாரிடம் பேசினார் என்பதை ஆய்வு செய்து, திருவள்ளூரில் இருக்கும் கார்த்திக்கின் தோழியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கார்த்திக் கொள்ளை நடந்த தினத்திற்கு முன்பு, தியாகராயநகர் செல்வதாகவும், நகைகள் எடுத்து வருவதாகவும் கூறியதாக, அவரது தோழி விசாரணையில் தெரிவித்தார்.

மேலும் கார்த்திக் மீது சில செயின் பறிப்பு மற்றும் குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. கார்த்திக்கின் கூட்டாளி சுரேஷ் என்பவனையும் சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை விரைவில் பிடித்து விடுவோம் என தனிப்படை காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.