ETV Bharat / state

பொன்முடி சொத்துக்கள் முடக்கம் - சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 11:13 AM IST

Etv Bharat
Etv Bharat

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்க புதிதாக உத்தரவு பிறப்பிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை : கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, விடுதலை செய்து கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அது கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடன் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடியின் எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது. விரைவில் அவர் போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பொன்முடியின் சொத்துக்களை முடக்கக் கோரிய வழக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கு மற்றும் சொத்துக்கள் முடக்க வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு, செத்துக்கள் முடக்கியதை ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக்களை முடக்க புதிதாக உத்தரவு பிறப்பிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க : பொன்முடிக்கு சிறை தண்டனை.. திருக்கோவிலூர் தொகுதியின் நிலைமை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.