ETV Bharat / state

வடசென்னை அனல் மின் திட்ட பணிகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

author img

By

Published : Jul 15, 2021, 6:44 AM IST

எண்ணூர் மற்றும் வட சென்னை பகுதிகளில் மத்திய-மாநில அரசுகளின் விதிகளின்படி மின் திட்ட பணிகள் நடைபெறுவதாக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் விளக்கத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ebminister
செந்தில்பாலாஜி

சென்னை: எண்ணூர் சிறப்பு பெருளாதார மண்டல மின் திட்டம்,வடசென்னை அனல் மின் திட்டம் நிலை -III ஆகியவை அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பிறகே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதில், "நிலக்கரி கன்வேயர் அமைப்பு உருவாக்குவதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அங்கீகரித்த நில வரைத்திட்டத்தின் (alignment) ஒழுங்கை மீறி தமிழ்நாடு மின்சார துறையின் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்காக, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கடல் மணலையும், நிலக்கரி சாம்பலையும் கொசத்தலையாற்றின் அலையேற்ற ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் கொட்டி, அங்கீகரிக்கப்படாத முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், அனைத்தும் சட்டப்படிதான் நடைபெறுவதாக அறிக்கையை அமைச்சர் வெளியிடும் வகையில் அவரை தமிழ்நாடு மின்சார துறை தவறாக வழிநடத்தியிருக்கிறது.


கள உண்மையை அறியும் நடவடிக்கை ஒன்றை 'எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரம்' மேற்கொண்டது. கையில் பிடித்துக்கொள்ளும் ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தி கள ஆய்வு நடந்தது. அதில் கட்டுமானத்தின் காரணமாக 15 ஏக்கர் அளவிலான நீர்நிலை பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அம்பலமானது.

இந்த ஆக்கிரமிப்பில் 1.1 ஏக்கர் அளவுக்கு நதியும், 14 ஏக்கர் அளவுக்குப் பிற சதுப்புநிலங்களும் அடங்கியுள்ளன. தொடர்ந்து கட்டுமானம் நடக்க அனுமதிக்கப்பட்டால், மேலும் 2.4 ஏக்கர் அளவுக்கு நதி மற்றும் அலையாத்தி வனப்பரப்பு ஆக்கிரமிப்புக்கு ஆளாகும்.

திட்டம் சட்டப்படியானது என்று அமைச்சரை தவறாக வழிநடத்தும் மின்சார துறையின் துடுக்குத்தனமும், கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பாகிய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செய்யவேண்டியதை செய்யாததும் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பதை காட்டுகின்றன.

கறைபடியாத நிர்வாகத்தை நடத்திக்காட்டுவோம் என்று புதிய அரசு சொல்லி வருவது உண்மையானதுதானா என்று காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இப்பிரச்சனை அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வன விவகாரங்களுக்கு மூத்த ஊழியர்களை நியமித்துவரும் அரசின் நடவடிக்கை எங்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது.

இவ்விவகாரத்தில் சட்டம் நிலைநாட்டப்படுவதை அரசு செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரத்தைச் சேர்ந்தவர்களும் மீனவர்களும் கூறுகிறார்கள்

கடந்த 12 ஜூலை அன்று, பேரா. எஸ். ஜனகராஜன், கலைஞரும் செயல்பாட்டாளருமான டி.எம் கிருஷ்ணா, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜி .சுந்தர்ராஜன் கொண்ட மூவர் குழு, எண்ணூர் கழிவெளி பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து, மின்சார துறையின் சட்ட மீறல்களை வெளிச்சமிட்டுக்காட்டியது" என குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் - காவரி விவகாரத்தில் கமல் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.