ETV Bharat / state

பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ல் தொடக்கம்; கலை அறிவியல் கல்லூரிக்கு 8ம் தேதி முதல் விண்ணப்பம்!

author img

By

Published : May 5, 2023, 9:07 PM IST

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

engg
பொறியியல்

பொறியியல்

சென்னை: பொறியியல் படிப்புகளில் பி.இ, பிடெக்., பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,' "2023-24ம் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கையின் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று (மே 5) முதல் தொடங்கப்படுகிறது. மேலும் ஜூன் மாதம் 4ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வந்த பின்னர் பதிவேற்றம் செய்யலாம். மாணவர்களின் வசதிக்காக கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம், சேர்க்கை விவரம் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

கடந்தாண்டு 446 பொறியியல் கல்லூரிகளில் 2,07,996 இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1 லட்சத்து 78 ஆயிரத்து 496 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்னர் மாணவர்கள் வேறு படிப்புகளில் சேர்வதால் ஏற்படும் இடங்களையும் கடந்தாண்டு நிரப்பினோம். இதனால், கல்லூரிகளில் காலியாகும் இடங்களையும் குறைத்துள்ளோம். வரும் ஆண்டில் அது மேலும் குறைக்கப்படும்.

பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 7ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்களின் சான்றிதழ்கள் ஜூன் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் சரிபார்க்கப்படும். தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படும். அதில் இருந்து ஒரு வாரம் மாணவர்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம்.

சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும். துணைக்கலந்தாய்வு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும். ஆதிதிராவிடர், அருந்ததியர் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவினர் சேர்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும். பொறியியல் கலந்தாய்வு அக்டோபர் 3ஆம் தேதி முடிவடையும். தேவைப்பட்டால் கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்படும். மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதனால் கலந்தாய்வு துவங்குவதற்கு கால அதிகம் தேவைப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் 8ஆம் தேதி தொடங்கும். மாணவர்கள் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு கலைக் கல்லூரிகளில் 1,07,395 இடங்கள் உள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் Website.www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர் 5 கல்லூரிகள் வரை விண்ணப்பம் செய்வதற்கு கட்டணமாக ரூ.50 செலுத்தினால் போதுமானது.

கடந்தாண்டுகளில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு விண்ணப்பத்திற்கு கட்டணமாக ரூ.50 வசூல் செய்யப்பட்டது. மாணவர்கள் கோரிக்கையை ஏற்று கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2,98,400 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 1,08,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்க்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது' - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.