ETV Bharat / state

'திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது' - அமைச்சர் பொன்முடி

author img

By

Published : May 5, 2023, 7:43 PM IST

'திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது. ஆளுநர் பதவி தான் இனி காலாவதியாக வேண்டியது' என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு ஆளுநருக்குப் பதிலளித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த பொன்முடி
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த பொன்முடி

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி

சென்னை: தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் உயர் கல்வி வளர்ந்தது. இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. சென்னை மாநிலக் கல்லூரி இந்தியாவில் 3 இடங்களில் உள்ளன.

சென்னை பல்கலைக்கழகம் 10ஆவது இடத்திலிருந்து நூறாவது இடத்திற்குச்சென்றுவிட்டதாக ஆளுநர் தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகம் உலக அளவில் 547ஆவது இடத்திலும் இந்திய அளவில் 12ஆவது இடத்திலும் உள்ளது.

உண்மை நிலவரம் இப்படி இருக்க யார் எழுதிக் கொடுத்த குறிப்பை ஆளுநர் இப்படி தவறாக வாசிக்கிறார் எனத் தெரியவில்லை. திராவிட மாடல் ஆட்சி நடக்கிற இந்த காலகட்டத்தில் தான் கல்வித்துறை மிகச் சிறப்பாக வளர்ச்சிப்பெற்று உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மிகச்சிறப்பாக இருக்கிறது எனப் பேசிவிட்டு, இப்போது மாற்றிப் பேசுவது அரசியலுக்காக இப்படி பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆளுநர் உண்மையான தரவுகளைத் தேடி அறிந்து கொள்ள வேண்டும். பிறகு, ஏதேனும் தவறு இருந்தால் அவர் சுட்டிக் காட்டட்டும். நாங்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர் தான் அரசியல் செய்து வருகிறார். கல்லூரி படிக்கக்கூடிய மாணவர்களை அழைத்து வைத்துக்கொண்டு அவர்களிடம் சனாதனம் பற்றி பேசி வருகிறார். ஆளுநராக இருப்பவர் இதுபோன்ற அரசியல் பேசுவது தவறான ஒன்று.

ஆளுநர் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. மத்திய அரசினுடைய பிரதிநிதியாக அவர் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவர் அப்படி செயல்படக் கூடாது. மாநில அரசு என்ன சொல்கிறதோ அதற்கு ஒத்துக்கொண்டு செயல்பட வேண்டியது தான், ஆளுநரின் கடமையாக இருக்க வேண்டும். சனாதனம் என்பதுதான் காலாவதியான ஒன்று, திராவிடம் காலாவதி ஆகவில்லை. திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதியாகிவிட்டது. காலாவதியாக வேண்டிய ஒன்று ஆளுநர் பதவி தான்.

தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிடம் இன்று அகில இந்திய அளவில் பரவத்தொடங்கி இருக்கிறது. திராவிடம் என்பது சமூக நீதிக்காக மனித நேயத்திற்காக மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. திராவிடம் என்பது யாரையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட கொள்கை அல்ல. திராவிட இயக்கம் பற்றி, நான் எழுதிய புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று திட்டமிட்டுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள சமூக நீதி இயக்கங்களுக்கு வழிகாட்டியாக திராவிட இயக்கம் திகழ்ந்து வருகிறது.

பல்கலைக் கழகங்களில் யாரும் அரசியல் செய்யவில்லை. ஏற்கனவே, பல்கலைக் கழங்களுக்கான துணைவேந்தர் தேர்வுக்குழுவின் மூலம் தான் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுகிறார். பல்கலைக் கழக மானியக்குழு எங்கும் வேந்தராக முதலமைச்சர் இருக்கக்கூடாது என கூறவில்லை. துணைவேந்தர் நியமனத்திற்கான உரிமையை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் முதலமைச்சர் வைத்துள்ளார்.

அவர்கள் அதற்கான சட்டத்திருத்தத்தை செய்துள்ளனர். அவர் அங்கு சென்று இது குறித்து கேள்வி எழுப்பட்டும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் பல்கலைக்கழக துணைவேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்கிறார் என கேள்வி எழுப்புகிறார். தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் அரசியல் நடக்கிறது என ஆளுநர் தெரிவிக்கிறார். என்ன அரசியல் நடக்கிறது என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'தீவிரவாதத்தை தோலுரித்துக் காட்டும் 'The Kerala Story': பிரதமர் மோடி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.