ETV Bharat / state

சென்னையில் அதிகரிக்கும் குப்பைகளின் அளவு.. கடந்த 9 நாட்களில் அகற்றப்பட்ட குப்பைகளின் அளவு என்ன தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 3:34 PM IST

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையில் அதிகரிக்கும் குப்பைகளின் அளவு
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையில் அதிகரிக்கும் குப்பைகளின் அளவு

Effects of Michaung Cyclone: 'மிக்ஜாம்' புயலின் எதிரொலியால் சென்னை மாநகராட்சியில் குப்பைகளின் அளவு அதிகரித்து வருவதாகவும், கடந்த 9 நாட்களில் மட்டும் 77 ஆயிரத்து 811.29 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: கடந்த டிசம்பர் 4ஆம் தேதி, 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட கன மழையால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுக் காணப்பட்டது. குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகியது.

மேலும் சென்னை மாநகரை, அதன் இயல்பு நிலைக்கு மீட்க அனைத்து துறையும், தன்னார்வலர்கள், உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதில் தூய்மை பணியாளர்களின் மற்றும் பிற துறை சார்ந்த பணியாளர்களின் சேவை இன்றி அமையாதது ஆகும்.

குறிப்பாக, தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பினும், சென்னையை இயல்பு நிலைக்கு மீட்க இரவும், பகலுமாக சுமார் 16 ஆயிரம் பணியாளர்களும், பிற மாவட்டங்களிலிருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் அயராது தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

பொதுவாகச் சென்னை மாநகராட்சியில் தினமும் 4 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் தினமும் அகற்றப்படுகின்றன. ஆனால், இந்த கனமழை வெள்ளத்திற்குப் பிறகு, தினமும் 7 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அதில், மெத்தை, கட்டில், இரும்பு போன்ற கழிவுகள் அதிக அளவில் வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அகற்றப்பட்ட குப்பைகளின் விவரம்: டிசம்பர் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையிலான 7 நாட்களில் 57,192.63 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. அதில், 6,553.89 மெட்ரிக் டன் குப்பைகள் மரம், செடி, கிளை போன்றவை ஆகும். அந்த வகையில், டிசம்பர் 6ஆம் தேதி 5,915 மெட்ரிக் டன் குப்பைகளும், டிசம்பர் 7ஆம் தேதி 6,465 மெட்ரிக் டன் குப்பைகளும், டிசம்பர் 8ஆம் தேதி 7,705 மெட்ரிக் டன் குப்பைகளும், டிசம்பர் 9ஆம் தேதி 8,476 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 10ஆம் தேதி 8,948 மெட்ரிக் டன் குப்பைகளும், டிசம்பர் 11ஆம் தேதி 9,215 மெட்ரிக் டன் குப்பைகளும், டிசம்பர் 12ஆம் தேதி 10,466.97 மெட்ரிக் டன் குப்பைகளும் மற்றும் டிசம்பர் 13ஆம் தேதி 11,613.19 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், சென்னை மாநகராட்சியில் வரலாறு காணாத அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டதாக, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். மேலும், இந்த குப்பைகளின் அளவு அடுத்த வரும் நாள்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று (டிச.15) மட்டும் சென்னை மாநகராட்சியில் 9 ஆயிரத்திற்கு மேலான மெட்ரிக் டன்னுக்கும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில், கடந்த 9 நாட்களில் மட்டும் 77,811.29 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், கன மழையால் பல பகுதிகளில் வாகனங்கள் பழுதடைந்துள்ளதால், குப்பைகளை அகற்றுவதில் சிரமும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிலம் யாருக்கு? நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.