சென்னை சேப்பாக்கத்தில் இன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் பொழிலன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள், "பெரியாரிய கொள்கை கொண்ட 100-க்கும் மேலான அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் டிசம்பர் 22ஆம் தேதி கோவையில் நடக்கவிருந்த, ’ஜாதி ஒழிப்பு மாநாடு’ அண்மையில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் நடூர் தீண்டாமைச்சுவர் இடிந்து விழுந்த நிகழ்வில், அதை எதிர்த்துப் போராடியோர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை இந்தக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. 22 அடி உயர சுவரை சிவசுப்பிரமணியன் தீண்டாமைச் சுவராகவே அமைத்ததுடன், அங்கு மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் கழிவுநீரை வெளியேற்றியுள்ளார். இதனை பலமுறை அரசு அலுவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால்தான் இன்று பல உயிர்கள் பலியாகியுள்ளன.
எனவே ஆறு அடி உயரமிருந்த சுவரை 22 அடித் தீண்டாமைச்சுவராக மாற்றிய சிவசுப்பிரமணியனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதைக்கண்டித்துப் போராடிய தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை. திருவள்ளுவனை அடித்து சித்ரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, ஆய்வாளர் சென்னகேசவலு உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நாகை. திருவள்ளுவன் மீது தொடர்பே இல்லாத பல வழக்குகளை காவல் துறையினர் பதிவதை கண்டிப்பதுடன் அவரை உடனடியாகப் பிணையில் விடுவிக்க வேண்டும் எனவும் இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது “ எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: ‘மருத்துவ இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் இல்லை’ - அமைச்சர் உறுதி