ETV Bharat / state

கட்சியினருக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்!

author img

By

Published : Jun 17, 2021, 5:19 PM IST

ராமதாஸ்
ராமதாஸ்

சென்னை: பாமக நிர்வாகிகளை தங்கள் கட்சியினரே சமூக ஊடகங்களில் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்றும், அவ்வாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சி, ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்ற இயக்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே குடும்பமாகப் பழகி வருபவர்கள் என்பது தான் நாம் பெருமைப்படும் விஷயமாகும்.

சமூக ஊடகங்களில் விமர்சிக்கும் போக்கு

அண்மைக்காலமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கு தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரான இப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன். எனவே, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த எவரும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேரடியாகத் தெரிவியுங்கள்

பொறுப்பாளர்கள் மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, சமூக ஊடகங்களில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு எதிராக பதிவிட்டால், அத்தகைய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர் என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பப்ஜி மதன் ரூ.5 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.