ETV Bharat / state

மாவட்டந்தோறும் பொறியியல் கலந்தாய்வு... கல்வியாளர்கள் கோரிக்கை...

author img

By

Published : Aug 24, 2022, 5:42 PM IST

மாவட்டந்தோறும் பொறியியல் கலந்தாய்வு...கல்வியாளர்கள் கோரிக்கை...
மாவட்டந்தோறும் பொறியியல் கலந்தாய்வு...கல்வியாளர்கள் கோரிக்கை...

பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வினை ஒற்றைச்சாளர முறையில், மாணவர்கள் நேரடியாக இடங்களைத்தேர்வு செய்யும் வகையில் மாவட்டந்தோறும் நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்றக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இளங்கலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வினை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு நடத்தி வருகிறது.

விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் 431 கல்லூரிகளில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் சிறப்புப்பிரிவினருக்கு 20,21ஆம் தேதி கலந்தாய்வும், சிறப்புப் பிரிவினருக்கு 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 21ஆம் தேதி வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுப்பிரிவுக் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கல்வியாளர் நெடுஞ்செழியன் பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்து கூறும்போது,”பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்கெனவே ஒற்றைச்சாளர முறையில் நேரடியாக கலந்தாய்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. ஆனால், தற்பொழுது தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் இடங்களைத்தேர்வு செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

மாவட்டந்தோறும் பொறியியல் கலந்தாய்வு... கல்வியாளர்கள் கோரிக்கை...

ஒரு பொறியியல் கல்லூரியில் உள்ள 5 பாடப்பிரிவுகளுக்கு ஒரு மாணவர் விண்ணப்பித்தாலும், சுமார் 2,000 இடங்களைத்தேர்வு செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் முன்னுரிமை அடிப்படையில் விரும்பும் இடங்களை பதிவு செய்வது சிரமமான செயலாகும்.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவினை சரியான கல்லூரியில் தேர்வு செய்வதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்கவும், தனியார் கல்லூரிகள் மாணவர்களை ஏமாற்றாமல் சேர்க்கை நடத்தும் வகையில் மீண்டும் நேரடி முறையைக் கொண்டு வர வேண்டும்.

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டும், தற்பொழுது உள்ள தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி மாவட்டந்தோறும் மாணவர்களை அழைத்து ஒற்றைச்சாளர முறையில் நேரடியாக கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வுசெய்ய முடியும். காலமும் பொருட்செலவும் குறையும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.