ETV Bharat / state

போலி பத்திரப்பதிவு குறித்து புகார்: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

author img

By

Published : Feb 14, 2023, 1:59 PM IST

போலி பத்திரம்
போலி பத்திரம்

உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலியான பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை: செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த நடேசன், கடந்த 2000 முதல் 2012ம் ஆண்டு வரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 9 பத்திரங்கள் போலியானவை என்றும், அவற்றை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் உண்மையானவை தான் என்பதை நிரூபிக்க தகுந்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராக, ஹரிநாத் என்பவருக்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரிநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "போலி பத்திரப்பதிவு என கூறி நடேசன் தாக்கல் செய்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது" என வாதாடப்பட்டது.

அரசு தரப்பில், "ஆவணங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியதில், சட்டவிரோதம் ஏதும் இல்லை" என தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதி, "உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், மோசடி ஆவணங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது. இந்த வழக்கில், மாவட்ட பதிவாளரின் நோட்டீசுக்கு, மனுதாரர் இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். புகார் மீது 12 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: கோவையில் போலி டிராவல்ஸ் நடத்தி மோசடி; 19 கார்கள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.