ETV Bharat / state

புலிகள் காட்டில் வாழும் பழங்குடிகள் - இடமாற்றத்திற்கு நிதி ஒதுக்க உத்தரவு

author img

By

Published : Aug 15, 2023, 6:39 AM IST

தெங்குமரகடா கிராம மக்களை இடம் மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தெங்குமரகடா கிராம மக்களை இடம் மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தெங்குமரகடா வனப்பகுதி தொடர்பான வழக்கில் வனப்பகுதியை மீட்டு எடுப்பதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: முதுமலையில் உள்ள தெங்குமரகடா கிராம மக்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைகள் இணைந்த வனப்பகுதியே முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயமாக உள்ளது. இங்கு புலிகள் மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான அரியவகை வன விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன.

முதுமலை வனப்பகுதியின் கிழக்கு எல்லையில் உள்ள தெங்குமரகடா கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் செறிந்து காணப்படும். 1948ல் அந்த வனப்பகுதியில் உள்ள நிலங்களை பொதுமக்கள் விவசாயம் செய்வதற்காக அரசு குத்தகைக்கு வழங்கியது.

அப்பகுதியில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகமானதால், அந்த வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டுமென முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு, கோவை வனப் பாதுகாவலர் 2011ல் பரிந்துரைத்திருந்தார்.

இதையும் படிங்க: கன மழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு !

அது தொடர்பான வழக்கில், அங்குள்ள 497 குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒரு குடும்பத்திற்கு 15 லட்ச ரூபாய் வீதம் 74 கோடியே 55 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்த தமிழக அரசு, அந்த பரிந்துரையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பியது.

ஆனால் ஆணையத்தில் போதிய நிதி இல்லை என கூறிய மத்திய அரசு, அதற்கு மாற்றாக தேசிய வன மேம்பாட்டு நிதியம் மற்றும் திட்ட ஆணையம் மூலமாக நிதி ஒதுக்க முடிவு செய்தபோது, அந்த நிதியை ஒரு கிராமத்தை மாற்றுவதற்காக பயன்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தெங்குமரகடா வனப்பகுதி தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, வனப்பகுதியை மீட்டு எடுப்பதற்கான நிதியை ஒதுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும், உடனடியாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அந்த தொகையை பெற்ற 2 மாதங்களில், அதனை தமிழகத்தின் தலைமை முதன்மை வனப் பாதுகாவலருக்கு விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஆணையத்திடமிருந்து பெற்ற தொகையை பயன்படுத்தி 4 வாரங்களில் 497 குடும்பங்களுக்கான இழப்பீட்டை வழங்கி, அவர்களை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தலைமை முதன்மை வனப் பாதுகாவலருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: சுதந்திர தின விழா: கைத்தறியால் ஆன தேசியக் கொடி பொது மக்களுக்கு வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.