ETV Bharat / state

தமிழகத்தில் 1,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு! சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 10:52 AM IST

Dengue Fever
டெங்கு காய்ச்சல்

Dengue Fever: தமிழகத்தில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 1,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் ஆய்வு மையங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை: தமிழகத்தில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து உள்ளது. இன்னும் 2 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பருவகால மாற்றத்தால் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று ஆய்வு மையங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 550 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சுத்தமான நீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்னும் 2 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வீடுகளை சுற்றிலும் உடைந்த பானை, தொட்டி, டயர், டியூப் போன்ற பயன்படுத்தப்படாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து, அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கொசு ஒழிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க:இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: ஆபரேஷன் அஜய் திட்டத்தில் மேலும் 143 இந்தியர்கள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.