ETV Bharat / state

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை போராட்டம்; சிபிஎம்

author img

By

Published : Mar 27, 2023, 9:40 PM IST

Etv Bharat
Etv Bharat

மின்வாரிய பணியாளர்களின் நிலுவையில் உள்ள நீண்ட கால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டுமென வலியுறுத்தி நாளை(மார்ச் 28) போராட்டம் நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை: மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் மின் நுகர்வோர் சேவை தடைபட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தப் பணியிடங்களை நிரப்பிடாமல் அவுட்சோர்சிங் முறைக்குச் சென்றபோது மின்வாரிய ஊழியர்கள் போராடி உத்தரவை திரும்பப் பெற வைத்தனர். ஆனால், தற்போது 50க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என அனைத்தும் அவுட்சோர்சிங் முறைக்கு மின்வாரிய நிர்வாகம் செல்வது படித்த வேலையில்லாத இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கின்ற செயலாகும்.

மின்வாரியத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். மேலும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் பொதுத்துறையில் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவோம் என்று சொன்ன வாக்குறுதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மின்வாரியத்தில் பதவிகளை அனுமதிக்காமல் ரீடி டிப்ளாய்மெண்ட் முறைக்குச் செல்வது சரியல்ல என சுட்டிக்காட்டப்பட்டதோடு, மின்வாரியப் பணியாளர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக பேசி நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் எனவும், மேலும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக அரசிற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், இதுநாள் வரையில் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை. இதற்கிடையே கடந்த 2022 ஏப்ரல் 12இல் மின்வாரிய தொழிலாளார்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலான ஆணை ஒன்றும் மின்சார வாரியத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள தீர்க்கப்படாத கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், கடந்த 2022 ஏப்ரல் 12இல் தமிழ்நாடு மின்சார வாரியம் பிறப்பித்த ஆணை 2ஐ ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகளை முன்வைத்து மின்சார வாரியத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை (மார்ச் 28) ஒரு கூட்டுப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளனர்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது. மேலும், மின்சார வாரிய ஊழியர்கள் ஒன்றிணைந்து நடத்துகின்ற பேரணிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது தோழமை ஆதரவையும் தெரிவிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "பால் கலப்படத்தை 30 நொடிகளில் கண்டறியும் 3டி கருவி" - சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.