ETV Bharat / state

கன மழையால் 1.45 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

author img

By

Published : Nov 11, 2021, 3:15 PM IST

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி

கன மழையால் 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை: தலைமை செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், இன்று (நவ.11) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. பருவமழை நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 44 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பெய்து வரும் மழையால் 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. சில இடங்களில் மழை குறைந்துள்ளதால் வெள்ள நீர் வடிந்து வருகிறது. மேலும் 33 விழுக்காடு அளவிற்கு சேதமான பயிர்கள் குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.

31 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கரில் தோட்ட கலை பயிர்கள் நடவு செய்யப்பட்ட நிலையில், 6 ஆயிரம் ஏக்கர் தோட்ட கலை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி

பயிர் சேத விவரம்

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை கணக்கிட கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து, அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்த பின் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

காய்கறிகள் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது. அதேபோல், இப்போதும் அமைக்க திட்டமிட்டுளோம்.

8 லட்சத்து 8 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர். 1 லட்சத்து 44 ஆயிரம் பேர் கடந்த ஆண்டை விட கூடுதலாக காப்பீட்டுக்கு பணம் செலுத்தி உள்ளனர். காப்பீடு செய்வதற்கான தேதியை இம்மாத இறுதி வரை நீட்டித்து தருமாறு ஒன்றிய அரசிடமும், காப்பீட்டு நிறுவனத்திடமும் கேட்டுகொண்டுள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.