ETV Bharat / state

சென்னையில் மெட்ரோ பணியின்போது கிரேன் கவிழ்ந்து விபத்து

author img

By

Published : Sep 2, 2022, 3:33 PM IST

மெட்ரோ ரயில் பணியின் போது தலைகீழாக கவிழ்ந்த கிரேன்
மெட்ரோ ரயில் பணியின் போது தலைகீழாக கவிழ்ந்த கிரேன்

சென்னை ரெட்டேரியில் மெட்ரோ பணியின்போது கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சென்னை: சென்னை மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வரை 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூபாய் 1,000 கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் தனியார் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக அந்தப்பகுதியில், தற்போது மேம்பாலத்திற்குத் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இரவு ஒரு மணி அளவில் சென்னை கொளத்தூர் - ரெட்டேரி சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த பணிக்குத் தேவையான 250 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்பினை அதிக திறன் மற்றும் எடை பாரம் கொண்ட கிரேன் மூலம் எடுத்து வைக்கும் வேலை நடைபெற்று வந்தது.

முன்னதாக அந்தப்பகுதியில் நேற்று காலை முதல் மழை பெய்து, அந்த இடமானது சேறும் சகதியுமாக இருந்ததால் ராட்சத கிரேன் இயந்திரத்தில் சக்கரத்திற்கும் பணி நடைபெறும் சாலையில் இருந்த களிமண்ணுக்கும் பிடிமானம் இல்லாததால் அதிக பாரம் தாங்காமல் கிரேன் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதனை அடுத்து அந்த ராட்சத கிரேனின் மேல் பகுதி, புதிதாக கட்டப்பட்ட சென்னை கொளத்தூர் ரெட்டேரி மேம்பால சந்திப்பின் மேலே உள்ள தடுப்புச்சுவரில் பக்கவாட்டில் மோதி, தடுப்புச்சுவரானது உடைந்து சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதனால் அந்தப்பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தொழிலாளர்கள் நல்வாய்ப்பாக உயிர்த் தப்பினார்கள். இந்தப் பணியானது மத்திய அரசால் முறையான பாதுகாப்பு வசதிகளோடு, உரிய பாதுகாப்பு வழிமுறைகளோடும் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதியோடு, இந்த ஒப்பந்த ஏலமானது தனியார் நிறுவனமான L and Tக்கு கொடுக்கப்பட்டது.

சென்னையில் மெட்ரோ பணியின்போது கிரேன் கவிழ்ந்து விபத்து

ஆனால், பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்பார்வையாளர்களின் அஜாக்கிரதை காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்து நடைபெற்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இடத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களோ, காவல்துறையோ, போக்குவரத்து காவல்துறையோ யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அந்த சென்னை கொளத்தூர் - மாதவரம் - ரெட்டேரி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்று வருவதால் அதிர்வலை ஏற்பட்டு, அந்த ராட்சத கிரேன் ஆனது மெல்ல மெல்ல அதன் பிடிமானத்திலிருந்து நகர்ந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகைப்பயிற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.