ETV Bharat / state

ரூ.564 கோடி மோசடி வழக்கு: கோஸ்டல் எனர்ஜி இயக்குநர் ஜாமீன் மனு தள்ளுபடி !

author img

By

Published : Aug 18, 2023, 3:28 PM IST

madras high court
சென்னை உயர்நீதிமன்றம்

Coal Import Scam: நிலக்கரி இறக்குமதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் கோஸ்டல் எனர்ஜி இயக்குநர் அகமது ஏ.ஆர்.புகாரிக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நிலக்கரி இறக்குமதியில் 564 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜி இயக்குநர் அகமது ஏ.ஆர்.புகாரிக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-2012 மற்றும் 2014-2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என இறக்குமதி செய்து அரசை ஏமாற்றியதாக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர்.புகாரி, தேசிய அனல் மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதேபோல, தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடியே 48 லட்சம் ரூபாயை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 557 கோடி ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அகமது ஏ.ஆர்.புகாரியின் ஜாமீன் மனுக்கள் சிறப்பு நீதிமன்றத்தால் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான கோப்புகளைப் பெற்று ஆய்வு செய்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜாமீன் உத்தரவில் நிபந்தனைகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதையும், இரு தரப்பு வாதங்கள் குறித்து உத்தரவில் விவாதிக்கப்படவில்லை எனக் கூறி, ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அமலாக்கத்துறை மனுவுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்துவிட்டு, மீண்டும் சிறப்பு நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பும்படி உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு பிரிவு பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க :"கருக்கலைப்பில் மைனர் பெண்ணின் தந்தை பெயர் அவசியமில்லை" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.