ETV Bharat / state

“பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 12:53 PM IST

Chief Minister Stalin has react to Nirmala Sitharaman speech Rs 5500 crore worth temple lands recovered
நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி

CM MK Stalin answered to Union Minister Nirmala Sitharaman: திமுக ஆட்சிக் காலத்தில்தான் 5 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள கோயில் இடங்கள் சொத்துக்கள் மீட்கபட்டுள்ளது, பக்தி இருந்தால் திமுக அரசை அவர்கள் பாராட்ட வேண்டும். உண்மையில் அவர்களுக்கு பக்தி இல்லை, மக்களை ஏமாற்றுவதற்காக வேஷம் போட்டுக் கொண்டுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி

சென்னை: சென்னை சிஐடி காலனியைச் சேர்ந்த திருமங்கலம் கோபால் - சரோஜினி ஆகியோரின் மகன் ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது - வகிலாபானு ஆகியோரின் மகள் சஜீக்கும் கலப்புத் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்திருத்த முறைப்படி இன்று நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற நிலையை உருவாக்கியது, நமது அரசு. இந்த திருமணம் சீர்திருத்த திருமணம் மட்டும் அல்லாமல், இந்தத் திருமணம் கலப்புத் திருமணம். அது மட்டும் அல்ல, காதல் திருமணமாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக, நிழல் போல் தொடரக் கூடிய பாதுகாவலராக இருந்தவர் கோபால். அதேபோல், உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய மருத்துவராகவும் கோபால் இருந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கண் அசைவிலே அவர் எண்ண சொல்லப் போகிறார், என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெரிந்து கொண்டு செய்யக் கூடியவர்தான் கோபால்.

மயிலாப்பூரில் 2 திருமணங்களை நடத்தி விட்டு, இந்த திருமணத்திற்கு காரில் வந்து கொண்டு இருந்தேன். அப்போது காேபாலை பற்றி காரில் பேசிக்கொண்டு வந்தேன். நான் பேச நினைத்ததை அப்படியே நேரு இங்கு பேசி விட்டார். முந்திரி கொட்டை மாதிரி என்று சொல்லுவார்கள், அதுபோல. நேரு எப்போதும் ஸ்பீடு, எல்லோரும் சொல்வதற்கு முன்னர் அவர் சொல்லிவிட வேண்டும். அவரிடம் ஏன் கூறினோம் என பீல் பண்ணிணேன். அந்த அளவிற்கு ஆர்வத்துடன் எடுத்துச் சொன்னார்.

1970 - 1971ஆம் ஆண்டில் மதுரையில் இளைஞர் அணி துவங்கப்பட்ட நேரத்தில், என்னுடன் இருந்தவர் திருமங்கலம் கோபால். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுச் சென்றபோது திண்டுக்கல் இடைத்தேர்தல் கலவரத்தில், என்னை பாதுகாத்தவர் திருமங்கலம் கோபால். தனது உயிர் பிரிகிற வரையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியோடு இருந்தவர் திருமங்கலம் கோபால்.

கட்சிக்காக உழைத்து எப்போதும் மிடுக்காக இருப்பார், கோபால். அதுதான் திமுகவை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. கோபாலின் 3 மகன்கள் திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்தார். 4வது மகனின் திருமணத்தை நான் நடத்தி வைத்துள்ளேன். அவரின் பேரக்குழந்தைகளின் திருமணத்தையும் நான்தான் நடத்தி வைப்பேன் என நம்புகிறேன்.

முதன் முதலில் இளைஞர் அணி துவக்கப்பட்டது முதல் நகரப் பகுதிகள், ஒன்றியப் பகுதிகள், கிராமப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். அப்போது எனக்கு துணையாக வந்தவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உயிர் பிரியும் வரையில் 2015ஆம் ஆண்டு வரையில் உடன் இருந்தவர் கோபால்.

அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், நாவலர், மதியழகன் போன்றவர்கள் இளைஞர்களாக இருந்து கட்சியில் வளர்ந்தார்களோ, இளைஞர்கள்தான் கட்சிக்குத் தேவை என்பதை உணர்ந்த காரணத்தால்தான் இளைஞரணியை உருவாக்கினார். அந்த இளைஞர் அணி எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்தக் கொண்டிருக்கீறீர்கள்.

அந்த அளவில் எல்லா அணிகளையும் விட, சிறந்த அணியாக கம்பீரமாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. விரைவில் ஈராேட்டில் மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டிற்காக செயல்வீரர்கள் கூட்டம் நடத்துகிறார். ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இருசக்கர வாகனப் பேரணியும் நடைபெற்று வருகிறது.

இளைஞரணி வளர வேண்டும் என நாங்களும் விரும்புகிறோம். அதற்கு ஏற்ப அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த பணி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இத்தகைய வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதேதோ தவறான தேவையற்ற பிரசாரங்களை, பொய் செய்திகளை அதுவும் ஊடகங்களைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இன்றைக்கு மக்களைக் குழப்பி கொண்டிருக்கும் செய்திகளைப் பார்க்கிறோம்.

யார் வேண்டுமானலும் குழப்பட்டும். தவறான கருத்துக்களை அண்ணாமலை போன்றோர் பரப்பினால் பரவாயில்லை,. மத்தியில் பொறுப்பில் இருக்ககூடிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்மையில் பேட்டி தரும்போது, கோயிலை கொள்ளை அடிப்பதாக கூறியுள்ளார். அதற்கு சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் இடங்கள், சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

உள்ளபடியே பக்தி இருந்தால் திமுக அரசை அவர்கள் பாராட்ட வேண்டும். உண்மையில் அவர்களுக்கு பக்தி இல்லை, பகல் வேஷம். மக்களை ஏமாற்றுவதற்காக வேஷம் போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான், இன்று நாடு போய்கொண்டு இருக்கிறது. அது மட்டும் அல்ல, ஒரு போலீஸ் அதிகாரி அவரது வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி போட்டுள்ளார்.

இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் எனவும், அந்த ஒட்டுக்கள் இல்லாமல் வெற்றி பெற்று விடுவோம் என நான் சொன்னதாக மிகப்பெரிய பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரி, ஓய்வு பெற்ற அதிகாரி செய்தி பரப்பி வருகிறார். அது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி திட்டமிட்டு, எப்படியாது திமுக அரசிற்கு குழி தோண்ட கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் தேர்தலில் நீங்கள் பாடுபட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.