ETV Bharat / state

உழைக்கும் தொழிலாளர்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : May 19, 2023, 8:31 AM IST

உழைக்கும் தொழிலாளர்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
உழைக்கும் தொழிலாளர்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு என்பது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு என்றும், உழைக்கும் தொழிலாளர்களுக்கான அரசு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் நேற்று (மே 18) தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ராணுவ வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் சீருடை இருப்பதைப் போல, கட்சியில் கருப்பும், சிவப்பும் கலந்திருக்கக் கூடிய சட்டை, பேண்ட் சீருடையாக அணிந்து இங்கு வந்து கலந்து கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர் தோழர்களை நான் பார்க்கிறேன். கம்பீரமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த காட்சியைப் பார்க்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு காட்சியைப் பார்க்கிறபோது, அத்தனை பேருக்கும் எழுச்சியும், உணர்ச்சியும் நிச்சயமாக ஏற்படும். அதுவும் எங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். 2012 மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நம்முடைய சண்முகம் கலந்து கொண்டு, சிறப்பாக தொழிற்சங்கத்தினுடைய உரிமைகளை எடுத்துச் சொன்னார்.

தொ.மு.ச. பேரவையின் நடவடிக்கையால் இந்தியாவில் 19 மாநிலங்களில் இணைப்புச் சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில அரசு சிறந்த தொழிற்சங்கமாக எல்பிஎஃப்-ஐத் தேர்வு செய்து பரிசும் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.

போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பணிகளை பாராட்டி, சர்வதேச தொழிலாளர் பேரவையும் நம்முடைய சங்கங்களை இணைத்துக் கொண்டது. 1969ஆம் ஆண்டு தலைவர் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடன், அண்ணன் துரைமுருகன் சொன்னது போல, தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, அன்றைக்கு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி ‘தொழில் - தொழிலாளர் நலம் - கூட்டுறவு’ என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித் துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கினார்.

ரத்தம் சிந்திப் போராடி, உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதாயம் பெற்றிருக்கக் கூடிய உரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில்தான், 1969ஆம் ஆண்டில் மே 1 ஊதியத்தோடு கூடிய விடுமுறை, பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது நம்முடைய தலைவர் கருணாநிதியின் உடைய மகத்தான சாதனைகளில் அதுவும் ஒன்று.

அவசரச் சட்டம் பிறப்பித்து, வேளாண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வழிவகை செய்தது திமுக அரசுதான். பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க பலம் இல்லாததால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலையைக் கண்டு, தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்ததும் திமுக அரசுதான்.

தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் ‘பணிக்கொடை’ வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதும் திமுக அரசுதான். விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காக ‘தொழில் - விபத்து நிவாரண நிதித் திட்டத்தை’ உருவாக்கியதும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துடன், விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நல வாரியம், கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி உதவிகள் செய்தது, திமுக அரசினுடைய மிகப் பெரிய மகத்தான சாதனை.

1990ஆம் ஆண்டு மே நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு ‘மே தின பூங்கா’ என்று பெயரிட்டு, மே நாள் நினைவுச் சின்னத்தை நிறுவியவரும் நம்முடைய தலைவர் கருணாநிதி தான். அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு வாதாட உருவானதுதான் உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நல வாரிய சட்டம் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

திமுக ஆட்சியின்போது உடலுழைப்புத் தொழிலாளர் சட்டத்தில் உள்ள பிரிவின் அடிப்படையில் பல வாரியங்கள் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் மத்தியிலே அமைப்புசாரா வாரியங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களைப் போல ஓய்வூதியம் வழங்கியது, பஞ்சப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கியது திமுக ஆட்சி.

அதேபோல் மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி அவர்களுக்கும் அனைத்து சலுகைகளும் பெற்றுத்தந்தது, திமுக அரசு. நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஆயிரக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி அவர்களுக்கும் பணிப் பலன்களை பெற்றுத் தந்தது திமுக அரசு.

சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு பணிக்கேற்ற ஊதியம் வழங்கியதும் திமுக அரசுதான். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அப்பரன்டீஸ் தொழிலாளர்கள், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கியதும் திமுக அரசு.

தொழில் வளருவதற்கு தொழிலாளர்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்த கருணாநிதி, குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம் மற்றும் அதிகபட்ச போனஸ் 20 சதவீதம் என மத்திய அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வரச் செய்ததும் திமுக அரசுதான். அந்த வழியில்தான் இன்றைக்கு உங்கள் அன்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய நமது திராவிட மாடல் அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில், 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

25க்கும் மேற்பட்ட தொழில்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இவை அனைத்துக்கும் மேலாக கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தர சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுடைய மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு மிகப் பெரிய அறிவிப்பாகும்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்திருக்கிறோம். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடைய ஊதிய உயர்வை மூன்றாண்டுகளாக நிலுவையில் விட்டுச் சென்ற அதிமுக அரசைப் போல் இல்லாமல், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களுடைய ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, 5 சதவீதம் ஊதிய உயர்வையும், ஊதிய அட்டவணை முறையையும் அளித்திருக்கிறோம்.

மத்திய அரசினுடைய மக்கள் விரோத, தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்து 12 மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் தொ.மு.ச. பேரவையும் கலந்து கொண்டு இந்திய அளவில் உழைக்கின்ற மக்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றது. அதற்கான உரிமையை தலைமைக் கழகத்தின் சார்பில் தொ.மு.சவிற்கு வழங்கி இருக்கிறோம்.

இந்தப் பேரவை அமைப்பில்தான், மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. தொழிலாளர்களே, தொழிலாளர்களை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்து செயல்படக் கூடிய ஒரு ஜனநாயக அமைப்பாக சீரும் சிறப்புமாகச் செயல்பட்டு வருகின்றது.

தொழிலாளர் தோழர்கள், தங்கள் உழைப்போடு சேர்ந்து உங்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள் என்று உங்களில் ஒருவனாக, இந்தத் தருணத்தில் உங்கள் அத்தனை பேரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள்.

கல்லூரிகள், உயர் கல்வி வரை நிச்சயமாக படிக்க வைக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு நீங்கள் தர வேண்டிய மாபெரும் சொத்தாகும். தொழிலாளர் தோழர்களின் மகன், மகள் - மருத்துவராக - பொறியாளராக - வழக்கறிஞராக - இன்னும் மேலான தகுதிகளைப் பெற வேண்டும். நமது திராவிட மாடல் அரசு என்பது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு. பாடுபடும் பாட்டாளிகளுக்கான அரசு. உழைக்கும் தொழிலாளர்களுக்கான அரசு.

நமது அரசு தொழிலாளர் நலன் காக்க செய்துள்ள திட்டங்களையும், சாதனைகளையும் அனைத்துத் தொழிலாளத் தோழர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தொ.மு.ச. தோழர்களான உங்களிடத்தில்தான் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மேதைகளாகத் திகழ்ந்த ‘சிந்தனைச் சிற்பி’ சிங்கார வேலரும், ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.கவும் தொழிற்சங்கங்களின் மூலமாக வளர்ந்தவர்கள்.

தொழிலாளர் தலைவர்களாக வளர்ந்து நாட்டின் தலைவர்களாக வளர்ந்தார்கள். நம்முடைய பேராசிரியரும், நாஞ்சிலாரும் தொழிற்சங்கத்தின் மூலமாகத்தான் வளர்ந்தவர்கள். அத்தகைய ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொ.மு.ச. தொடர்ந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ. 33 கோடியில் உருவாகும் பொருநை அருங்காட்சியகம்.. எப்படி இருக்கும்? பிரமிக்க வைக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.