ETV Bharat / state

கேப்டன் விஜயகாந்த் மறைவு; கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான நட்சத்திரங்களின் உருக்கமான பதிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 3:00 PM IST

Updated : Dec 28, 2023, 4:02 PM IST

Vijayakanth Death
விஜயகாந்த் மறைவு

Vijayakanth Passed away: மக்களால் அன்போடு கேப்டன் என அழைக்கப்படும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு திரைப்பிரலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று (டிச.28) காலை 6.10 மணிக்கு காலமானார். தற்போது அவரது உயிரிழப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிவகுமார்: தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர். ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில், நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து, வரண்டாவில் படுத்துக்கொள்வார்.

எளிமையானவர், நேர்மையானவர். நடிகர் சங்கத் தலைவராக அவர் இருந்தபோது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று, அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். 'சாமந்திப்பூ' படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். 'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல்ஹாசன்: எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைபிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

டி.ராஜேந்தர்: திரையுலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிக் கலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என்று தலையெடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராய் பதவி வகித்து, தேமுதிக தலைவராய் உருவெடுத்து, தமிழக எதிர்கட்சித் தலைவராய் கால் பதித்து, தனகென்று ஒரு தனிப்பெயரை ஈட்டிய அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறிக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சரத்குமார்: அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னைப் போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

திரைப்பட பாடலாசிரியர் அருண்பாரதி: மதுரை மாகாளிபட்டியிலிருந்து மாநகரம் சென்னைக்கு வந்த கருப்பு வரியன். அரசியலில் ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும்போதே களத்தில் குதித்த நெருப்பு வரியன். சினிமாவில் அரசியல் செய்யத் தெரியாதவர், அரசியலில் சினிமாபோல நடிக்கத் தெரியாதவர். கதாநாயகனாக தோன்றிய முதல் படம் மட்டுமல்ல, இருட்டிலிருந்த பலரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில், இவர் எப்போதும் அகல்விளக்கு வெளிச்சம் குறையாத பகல்விளக்கு.

தவிக்கும் நெஞ்சங்களின் தவிப்பறிந்து தர்மங்கள் செய்ததால், இவர் எப்போதுமே ஏழை சாதி. அரிசி ஆலையில் பணியாற்றியதாலோ என்னவோ, பலரின் பசியறிந்து பசிதீர்த்த பாமர ஜோதி. புரட்சிக் கருத்துகளை திரையில் விதைத்த புரட்சித் தலைவரின் இரண்டாம் பாதி.

இயக்குநர் பாரதிராஜா: எனது நண்பர் கேப்டன் விஜயகாந்தின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிஞர் வைரமுத்து: எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார். திரையில் நல்லவர்; அரசியலில் வல்லவர். சினிமாவிலும், அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர். கலைவாழ்வு, பொதுவாழ்வு, கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர். கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல் செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர். எதிர்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம்" என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம்: மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவர் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம் கேப்டன்.

பாலிவுட் நடிகர் சோனு சூட்: கள்ளழகர் எனது முதல் திரைப்படம். இது எனக்கு விஜயகாந்த் சார் கொடுத்த பரிசு. என்னுடைய இந்த ஸ்டில் அவர் கண்ணில் பட்ட கொஞ்ச நேரத்தில், நான் அவருடைய படப்பிடிப்பில் இருந்தேன். நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களை மிஸ் பண்ணுவேன் கேபடன்.

நடிகை த்ரிஷா: கேப்டன் மறைவு (RIP captain), பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். உங்களது அன்பை நான் என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்வேன்.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்: "அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன். உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை.

இயக்குநர் மாரி செல்வராஜ்: அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: சிறந்த நடிகர், தலைவர், உத்வேகம் மற்றும் சிறந்த மனித ஆன்மா இனி இல்லை. நீங்கள் என்றும் அழியாமல் இருப்பீர்கள். தமிழ் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் புன்னகையுடன் வாழ்வீர்கள். உங்களை ஆட்சியாளராக மாற்ற, தமிழக மக்கள் தவறவிட்டோம். அதற்காக நாங்கள் என்றென்றும் வருந்துவோம். எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் ஓய்வெடுங்கள்.

நடிகர் நெப்போலியன்: தேமுதிகவின் தலைவரும், கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் நமது அன்பு அண்ணன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம். மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்தோம். அன்பு சகோதரி குஷ்பு, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா எனக்கு தொலைபேசியில் அழைத்து விஐயகாந்த் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள். இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்ய வேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்.

அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து, நடிகர் சங்க கடனை அடைத்து கட்டடத்தை மீட்டெடுத்தல் என எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் அவருடன் நண்பர் சரத்குமாரும், நானும் உடனிருந்து கடினமாக உழைத்து வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம், எங்களால் என்றும், எதையும் வாழ்நாளில் மறக்க இயலாது.

கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்தபோது, அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாகச் சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது, இன்றும் எனது மனதில் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர்" என தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி: நமது ‘புரட்சிக் கலைஞர்’ ‘கேப்டன்’ விஜயகாந்த் இப்போது இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர், வெகுஜனங்களின் நாயகன், பன்முக ஆளுமை மற்றும் புத்திசாலித்தனமான அரசியல்வாதி. அவர் நேராக தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர். அன்பான ‘கேப்டன்’ நம்மை விட்டு வெகு சீக்கிரத்தில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்று விட்டார்.

விஷால்: என் வாழ்வில் நான் சந்தித்த மிக உன்னதமான மனிதர்களில் ஒருவரான விஜய்காந்த் மறைவைக் கேள்விப்பட்ட பிறகு, இந்த நேரத்தில் நான் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. நான் உங்களிடமிருந்து சமூக சேவை கற்றுக் கொண்டேன், இன்றுவரை உங்களைப் பின்தொடர்ந்தேன், உங்கள் பெயரில் இனியும் அதைத் தொடர்வேன். நம் சமுதாயத்திற்குத் தேவையான ஒருவரை கடவுள் ஏன் இவ்வளவு வேகமாக அழைத்துச் செல்கிறார்? உங்களை கடைசியாக ஒரு முறை பார்க்க வராததற்கு வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்: தமிழ்த் திரையுலகம் நமக்கு தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும், தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர்.

பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர். அன்பால், பண்பால், அறத்தால், மறத்தால் நம் அனைவரின் அன்பையும், ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு.

நடிகர் சிம்பு: விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டு மனம் உடைந்தது. ரீல் மற்றும் நிஜத்தில் அவர் ஒரு ஹீரோ. அவரை நான் எப்போதும் ஒரு சகோதரராகவே பார்த்தேன்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரும் இழப்பு. ஒரு நடிகராக தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த மனிதநேயம் கொண்டவராக, தனது உறவுகளான திரைத்துறையினருக்கு சிறப்பான வகையில் உதவி புரிந்தவராக, நல்ல அரசியல்வாதியாக, குடும்பத் தலைவனாக, அனைவருக்கும் சிறந்த நண்பராக என எல்லா வகையிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். இது ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓய்வெடுங்கள் கேப்டன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து, அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். திரைப்பட தயாரிப்பாளர்களை "முதலாளி" என அன்போடு அழைத்தவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர்.

தமிழ் திரையுலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்தநாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மனிதநேயமிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை (டிச.29) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து, அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்" என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: அரசியல் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆரின் வாகனம்..! கேப்டன் விஜயகாந்த் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்..!

Last Updated :Dec 28, 2023, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.