ETV Bharat / state

டிப்டாப்பான உடையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச்சேர்ந்தவர் சிக்கியது எப்படி?

author img

By

Published : Jul 27, 2023, 7:55 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனையும், அவரது 23 வயது கூட்டாளியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை: மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு விமான மூலம் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு, இவ்வாறு திருடிய செல்போன்களை கொல்கத்தாவில் விற்று வந்த 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரையும் சென்னை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கடந்த 4 நாட்களில் பயணிகளிடம் 22 செல்போன்களைத் திருடி கைவரிசை காட்டியது குறிப்பிடத்தக்கது.

செல்போன் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய சிறுவன்: புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், மாம்பலம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டதாக தொடர்ச்சியாக ரயில்வே காவல் துறையினருக்குப் புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடுபோன சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வடமாநில சிறுவன் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பயணி ஒருவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.

லாட்ஜில் தங்கியிருந்த மேற்கு வங்க வாலிபர் கைது: இதனையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசாரை உஷார்படுத்திய நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் அதே சிறுவன் செல்போன் திருட வந்தபோது அச்சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் அளித்த தகவலின் பேரில், திருவல்லிக்கேணியில் லாட்ஜில் தங்கியிருந்த மற்றொரு வடமாநில வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனில்குமார் நோனியா(23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள லாட்ஜில் தங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

டிப்டாப்பான உடையில் திருட்டில் ஈடுபட்ட சிறுவன்: பின்னர் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள மால்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செல்போன் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுவும் சிறுவர்களை அனுப்பி அனில் குமார் நோனியா செல்போன் பறிக்க வைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பயணிகளுக்கு சந்தேகம் வராமல் இருக்க சிறுவர்களுக்கு டிப்டாப் உடை மற்றும் கூலிங் கிளாஸ் கொடுத்து அனில் செல்போன் பறிக்க அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு முறையும் செல்போன் பறித்துவிட்டு, ரயில் மூலமாக மேற்கு வங்கத்திற்குச் சென்று அங்கு திருடிய செல்போன்களை விற்பனை செய்துவிட்டு சொகுசு வாழ்க்கையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த 4 நாட்களில் மட்டும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 22 செல்போன்களை பறித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இதேபோல, தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கைவரிசை காட்டி இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களிடமிருந்து திருடப்பட்ட விலையுயர்ந்த 22 செல்போன்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து சிறுவனை சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்து, வாலிபரை சிறையில் அடைத்தனர். மேலும் இதேபோல, எத்தனை சிறுவர்களை அழைத்து வந்து சென்னையில் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.