ETV Bharat / state

பைக் திருட்டு, தங்கம் கடத்தல், குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை உள்ளிட்ட சென்னை குற்றச் செய்திகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 11:03 PM IST

சென்னை குற்றச் செய்திகள்
சென்னை குற்றச் செய்திகள்

chennai crime news: பைக் திருட்டு, கடல் வழியாக தங்கம் கடத்தல், குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை உள்ளிட்ட சென்னையில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி குற்ற சம்பவங்கள் குறித்த செய்தி தொகுப்பை காணலாம்

சென்னை: விருகம்பாக்கம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகன் வேலைக்கு செல்வதற்காக தனது நகைகளை அடகு வைத்து 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை இஎம்ஐ முறையில் வாங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு ராஜேஷ்வரி மகன் வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து வழக்கம் போல் இன்று காலை இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், ராஜேஷ்வரி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரிய வந்துள்ளது. பைக் திருடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக 100 கிலோவிற்கும் அதிகமான தங்கம் கடத்தல்: சவுதி அரேபியாவில் இருந்து தங்க கட்டிகளை இலங்கை நாட்டிற்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து கடல் வழியாக தங்க கட்டிகள் தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள சில நகைக் கடைகள் உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடத்தல் தங்கங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக திருச்சி, சென்னையில் உள்ள நகைக்கடைகளில் சில தினங்களுக்கு முன்பு மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில தங்க நகை கடைகளில் ஹவாலா பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது குறித்து முக்கிய புள்ளிகள் யார் என்பதை கண்டறியும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவை தட்டிவிட்ட இரண்டு குழந்தைகளுக்கு தந்தை சூடு வைத்ததால் பரபரப்பு: தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி கணேஷ் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மேலும் டெல்லி கணேஷ் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. டெல்லி கணேஷ் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் டெல்லி கணேஷ் வீட்டில் கஞ்சாவை புகைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது இரண்டு மகள்களும் விளையாட்டுத்தனமாக கஞ்சாவை கீழே தட்டி விட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த டெல்லி கணேஷ் கஞ்சா போதையில் சமையல் கரண்டியில் இரண்டு குழந்தைகளுக்கும் சூடு வைத்துள்ளார். இதில் இரண்டு குழந்தைகளுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தைக்கு சூடு வைத்த டெல்லி கணேசனை தேடி வருகின்றனர்.

மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது டிராக்டர் ஏரியதால் உயிரிழப்பு: மெரினா கடற்கரை நேதாஜி சிலை அருகே 59 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடற்கரையில் இருந்து படகுகளை வெளியே இழுக்கும் டிராக்டர்கள் இயக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த முதியோர் மீது டிராக்டர் ஏரி இறங்கி உள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த நபரை அங்கிருந்த நபர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மெரினா போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் டிராக்டரை இயக்கியது காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டீ குடிக்க புதுச்சேரி, டிபனுக்கு சென்னை, சாப்பாட்டுக்கு கோவை.. மக்களிடம் நூதன முறையில் ஏமாற்றிய நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.