சென்னை விமான நிலையத்தில் எப்பொழுதும் முக்கிய பண்டிகைகளை பயணிகளுடன் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமான ஒன்று. அதுபோல் வருகின்ற 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் வண்ண விளக்குகளால் மிளிர்வதைப் பார்க்கும் பயணிகள் தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். அதுமட்டுமின்றி எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய தொழிற் பாதுகாப்புப் படை போலீசார் 24 மணி நேரமும் விமான நிலையத்தைச் சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் நுழையும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கடுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி வரும் வாகனங்களையும் சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைக்கின்றனர். மேலும் வெடிகுண்டு கருவிகள் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களை மக்கள் பார்க்க நாளை தடை!