ETV Bharat / state

அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

author img

By

Published : Dec 2, 2022, 2:21 PM IST

அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும்.

பிறகு மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதியை ஒட்டி வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக் கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று (டிச.2) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் நாளை (டிச.3) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் நாளை மறுதினம் (டிச.4) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து டிசம்பர் 5ஆம் தேதி தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் டிசம்பர் 6ஆம் தேதி தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

வருகிற டிசம்பர் 4ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் டிசம்பர் 5ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்ந்து டிசம்பர் 6ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.