ETV Bharat / state

சென்னையில் உயிரிழந்தவரின் பெயரில் மோசடி.. துணை மேயர் உள்பட 6 பேர் மீது வழக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 7:21 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் உயிரிழந்தவரின் பெயரை போலியாக பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மாநகராட்சி துணை மேயர், மாவட்ட பதிவாளர் உள்பட 6 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: மேற்கு தாம்பரம் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள்(42). இவரது கணவர் மோகன். இந்த நிலையில், சைதாப்பேட்டையில் உள்ள மார்ஸ் மைன்ஸ் என்ற நிறுவனத்தை மோகன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன், திவாகரன் ஆகிய ஆறு பேர் பங்குதாரர்களாக இருந்து நிர்வகித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மோகன் உயிரிழந்தார். மோகன் உயிரிழந்துவிட்டதால் அவரது பங்கை மனைவி இசக்கியம்மாள் அவர்களிடம் கேட்டு முறையிட்டுள்ளார். ஆனால், மோகனுக்கு உரிய பங்கை அவரது மனைவியிடம் தராமல் அலைக்கழித்து வந்த நிலையில், திடீரென தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து இசக்கியம்மாளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், இறந்த மோகன் உயிருடன் இருப்பதுபோல, போலியாக சித்தரித்து கையெழுத்திட்டு பங்கை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பின்னர் உடனே, இது சம்பந்தமாக இசக்கியம்மாள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, தென்சென்னை மாவட்ட பதிவாளர் சத்யபிரியாவிடம் விசாரித்துள்ளார். அப்போது துணை மேயர் மகேஷ் உள்பட ஐந்து பேர் போலியான ஆவணங்களை சித்தரித்து அவரது பங்கை மோசடி செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த மோசடி சம்பவம் தொடர்பாக, இசக்கியம்மாள் மாநகராட்சி துணை மேயர் மகேஷ், குணசேகரன், பதிவாளர் சத்யபிரியா உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2021ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இசக்கியம்மாள் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மோசடி, போலியான ஆவணத்தை புனைதல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி துணை மேயர் உட்பட பலரும் இணைந்து போலியான ஆவணங்களுடன் மோசடி செய்ய முயன்ற சம்பவம் இந்த சம்பவம் சென்னை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடிபோதையில் தாய்மாமன் மகன் கொலை - பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.