ETV Bharat / state

பாஜக பட்டியல் அணி மண்டலத் தலைவர் வெட்டிக் கொலை.. ரவுடியாக இருந்து திருந்தியவருக்கு நேர்ந்த சோகம்! அரசியல் காழ்புணர்ச்சியா? முன்விரோதமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 11:42 AM IST

bjp
பாஜக பட்டியல் அணி மண்டலத் தலைவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் பாஜக பட்டியல் அணி மண்டலத் தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பு ரவுடியாக இருந்தவர் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் திருந்தி வாழ்ந்து வந்த நிலையில், வெட்டி கொலைச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி வீட்டுமனைப் பிரிவில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் இளைஞர் இறந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக, பீர்க்கன்கரணை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் கிடந்தவரின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் இறந்த இளைஞர் பழைய பெருங்களத்தூர் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வந்த பீரி என்கின்ற வெங்கடேசன் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டு பலமுறை சிறைக்குச் சென்றதாக போலீசார் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக, போலீசாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ரவுடியிசத்தை கைவிட்டு திருந்தி வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் தான் வெங்கடேசன் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

கொலைக்கான காரணம் மற்றும் எவ்வாறு இந்த கொலை சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டைசன் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

சுமார் அரை கிலோ மீட்டர் ஓடிச் சென்று நாய் நின்ற நிலையில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை காவல்துறையினர் முன்விரோதமா, அரசியல் காழ்புணர்ச்சியா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கு மிக முக்கிய காரணம் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு என்பது விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"நா பொண்ணுங்க பின்னாடிலாம் சுற்றல...! தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி கலகல பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.