ETV Bharat / state

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை விவகாரம்.. அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்

author img

By

Published : Aug 18, 2022, 5:21 PM IST

அரும்பாக்கம் வங்கி கொள்ளை விவகாரத்தில் அச்சரப்பாக்கம் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை விவகாரம்
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை விவகாரம்

சென்னை: அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் தங்க நகைகள் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கொள்ளை போனதாக கூறப்படும் 31.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் காவல்துறையினர் முறையாக கணக்கிட்டு பார்க்கும் பொழுது 28 கிலோ தங்கம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வங்கி தரப்பில் கொள்ளை போன தங்கம் எவ்வளவு என்பதை தவறாக அதிகளவில் மதிப்பிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொள்ளை போன தங்கம் எவ்வளவு என்பது குறித்து ஆவணங்களுடன் சமர்பிக்க வங்கி நிர்வாகிகளிடம் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் எவ்வளவு தங்கத்தை கொள்ளை அடித்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகிய இரு கொள்ளையர்களை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. குறிப்பாக கொள்ளையன் சந்தோஷ் கொள்ளை சம்பவம் நிகழ்ந்த பிறகு இரண்டு மணி நேரம் பொழிச்சலூர் பகுதியில் சுற்றி வந்தது செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போது தெரியவந்தது. மேலும் அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமல்ராஜின் மனைவி மெர்ஸியும், சந்தோஷின் மனைவி ஜெயந்தியும் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடிப்படையாக வைத்து சந்தோஷிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஒரு கட்டத்தில் சந்தோஷ் தங்கம் எங்கு மறைத்து வைத்திருக்கிறேன் என்பதை தெரிவிப்பதாகவும், ஆனால் இதில் தொடர்புடைய நபர் காவல் ஆய்வாளர் என்பதால் அவரை வழக்கில் சேர்க்கக்கூடாது என காவல்துறையிடம் சத்தியம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. கொள்ளையன் சந்தோஷிடம் இருந்து உண்மையை வரவழைப்பதற்காக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என தனிப்படை போலீசார் சத்தியம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் தங்க நகைகளை பதுக்கி வைத்திருப்பதை கொள்ளையன் சந்தோஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் அச்சரப்பாக்கம் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளை சம்பவ விவகாரத்தில் ஆய்வாளர் அமல்ராஜிற்கு தொடர்பு இருப்பது உறுதியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் அமல்ராஜ் காஞ்சிபுரம் மாவட்டம் காவல்துறையில் பணிபுரிவதால், ஆய்வாளர் அமல்ராஜிற்கு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய தகவலை, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு தெரிவித்து விசாரிக்கும்படி சென்னை காவல்துறை கூறியுள்ளது.

அதே நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை மறைத்து வைத்திருக்கிற காரணத்தினால் அவர் மீது தற்காலிக பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்ஸிக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதில் கிடைக்கும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வங்கியில் இருந்து மொத்தமாக கொள்ளை போன தங்க நகைகள் எவ்வளவு என்பதும், கொள்ளையர்கள் கொள்ளையடித்த தங்க நகைகள் எவ்வளவு என்பதும் கேள்விக்குறியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் இன்னும் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அரும்பாக்கத்தில் திருடப்பட்ட நகைகள் காவல் ஆய்வாளர் வீட்டில் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.