வருவாயை விட 750% அதிகம் சொத்து சேர்த்த ஓய்வு பெற்ற காவலர் மீது வழக்கு!

author img

By

Published : Jan 26, 2023, 1:52 PM IST

சொத்து சேர்த்த ஓய்வு பெற்ற காவலர்

சென்னையில் வருமானத்தை விட 750 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒய்வுபெற்ற காவலர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை: ஆலந்தூர் மோர்சன் தெருவில் வசித்து வருபவர் சௌந்தர்ராஜன். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். சென்னை காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவு தலைமைக்காவலராக பணியாற்றி வந்த சௌந்தர்ராஜன், பணியின் போது லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் பணியின் போது ஊழல் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சௌந்தர்ராஜன் மற்றும் அவரது மனைவி உமாதேவி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் சௌந்தர்ராஜன் மத்திய குற்றப்பிரிவில் வெளிநாட்டு மண்டல பதிவு அலுவலகத்தில் காவலராக பணியாற்றிய போது லஞ்சம் வாங்கி தனது மனைவி பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுமட்டும் இன்றி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 1.36 லட்சமாக இருந்த அவரது சொத்துமதிப்பு, தற்போது கூடுதலாக 1.66 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் முன்னாள் காவலர் சௌந்தர்ராஜன் பணியில் இருந்த போது தனது மனைவி உமாதேவி பெயரில் சேலம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர் பகுதியில் 1.66 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் வாங்கி குவித்தது தெரியவந்தது.

முன்னதாக மண்டல பதிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவர், குறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கடந்த 2014 ஆம் ஆண்டு, கடத்தல் காரர்களுக்கு தங்கம் கடத்த உதவியாக இருந்ததாக மத்திய வருவாய் துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பலமுறை தங்க கடத்தல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு கடத்தல் தங்கத்தை அனுமதித்துள்ளார். இவ்வாறாக லஞ்சம் வாங்கி காவலர் சௌந்தர்ராஜன் சொத்துக்களை குவித்ததால் கட்டாய ஓய்வுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சௌந்தர்ராஜன் யார் யாரிடம் எவ்வளவு ரூபாய் லஞ்சம் பெற்று சொத்துக்களை வாங்கியுள்ளார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறயினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - காவல் ஆய்வாளர் சாட்சியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.