ETV Bharat / state

"வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் திமுகவினர் இல்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை சாடல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 7:45 PM IST

Etv Bharat
Etv Bharat

K Annamalai: சென்னையில் கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல இம்மீட்புப் பணிகள் உள்ளதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, சம்பளம் வாங்கும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் களத்திற்கு வரவேண்டும் என விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிச.8) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அம்பத்தூர் தொழிற்சாலை சுமார் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட எம்எஸ்எம்இ (MSMEs) நிறைய தொழில் நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் ரூ.13,000 கோடி வருவாய் ஈட்டி தரக்கூடியவர்கள்.

இங்கு உள்ள மிஷின்கள் எல்லாம் நீரால் சூழ்ந்து பழுதடைந்துள்ளன. இதனால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ஆயிரம் நிறுவனங்கள் அனைத்துமே ஸ்தம்பித்து போய் நிற்கின்றன. இதனால், இவர்கள் உற்பத்தி பண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு உள்ள மிஷின்கள் லோன் அடிப்படையில் வாங்கியுள்ளனர்.

மத்திய அமைச்சரிடம் பாதிப்பு குறித்து தகவல்: தற்போது அவற்றுக்கு லோன் கட்ட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வலியுறுத்துகிறோம். மேலும் மத்திய அமைச்சரிடம் நாளை சந்தித்து இது குறித்து தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

மேலும், 'போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இருந்தால் அமைச்சர்கள் களத்தில் இருந்திருப்பார்கள். பொறுப்பு அமைச்சர்கள் களத்தில் இல்லை. இருந்திருந்தால் மக்களின் கோபம் குறைந்து இருக்கும். அரசியல் ரீதியாக, இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். திமுக நிர்வாகிகள் கூட களத்தில் இல்லை.

சம்பளம் வாங்கும் அமைச்சர்கள் களத்திற்கு வரவேண்டும்: கண் கெட்டப் பிறகு, சூரிய நமஸ்காரம் என்பதைப் போல உள்ளது. மக்களுக்கு 234 எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் தேவை இல்லை. இவர்களின் சம்பளம், நிவாரணத் தொகை என்பது ஒரு துளிதான். எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்., அமைச்சர்கள் ஆகியோருக்கு சம்பளம் கொடுப்பதைவிட, களத்திற்கு வந்தால் பிரச்னைத் தீரும். மழை வெள்ளம் குறித்து ஊடகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது' எனக் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், 'பஜாக களத்தில் வந்தது மத்திய அரசுக்கும், துறை சார்ந்த அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் நிலை குறித்து தெரிவித்து தேவையான உதவிகளை செய்வதற்கு தான். நிவாரணம் உதவி செய்வதில் பாஜக தெளிவாக உள்ளது. மத்திய அமைச்சரை சந்திக்க உற்பத்தியாளர்கள் வர உள்ளனர். அவர்கள் கோரிக்கைகளை நேரடியாக அமைச்சரிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அமைச்சருக்கு இந்த பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க இங்கு வந்துள்ளேன்' என்றார்.

கமலின் கருத்து குறித்து பேச விரும்பவில்லை: கமல் களத்தில் இல்லை, கூலி வேலை செய்பவர்கள்கூட களத்தில் உள்ளனர். சொல்வது எளிது செய்வது கடினம். அண்ணன் கமல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. சேவை செய்பவர்கள் களத்தில் உள்ளனர். இளைஞர்கள், மென் பொறியாளர்கள் என முகம் தெரியாத பலரும் உதவி செய்கின்றனர்.

சினிமா நடிகர்களின் ரசிகர்கள் உதவி செய்வது வரவேற்கத்தக்கது. சென்னை வாசிகள் சென்னையை கைவிடவில்லை, சென்னை வாசிகள் பிற மாநிலங்களிலிருந்து வந்தும் கூட உதவி வருகின்றனர். தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும் தேசிய தலைமைக்கு மாநில தலைமை சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

கமல் கூறியது என்ன?: சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு அரசு ரூ.4000 கோடி செலவு செய்ததாக கூறப்படும் நிலையில், உண்மையில் அதற்கான வேலைகள் நடந்திருந்தால், சென்னை மாநகரம் இவ்வளவு பாதிப்புகளை சந்தித்து இருக்காது என பலரும் அரசை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளனர். இந்நிலையில், இதற்கு அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி வந்து செயல்படுவதே முக்கியம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொத்துக் குவிப்பு வழக்கு... முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குடும்பத்துடன் கோர்டில் ஆஜர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.