ETV Bharat / state

மக்களைக் கடனாளி ஆக்கிய திமுக - ஓபிஎஸ் பேச்சு

author img

By

Published : Feb 13, 2022, 9:14 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை

திமுக ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கொடுத்த அறிவிப்பினால் இன்று திமுகவை நம்பி மக்கள் கடனாளியாகி உள்ளனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்டங்களுக்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 13) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சிக் காலத்தில் ஐந்து லட்சம் ஏழை, எளிய மக்களுக்குத் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன. திமுகவின் 2006-2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றபின் மின் தடை இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறியது.

அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது. தற்போது திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கொடுத்த அறிவிப்பினால் இன்று திமுகவை நம்பி மக்கள் கடனாளியாக மாறியுள்ளனர். நிர்வாகத்திறன் அற்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை

பொங்கல் சிறப்புத் தொகுப்புப் பொருள்களை தமிழ்நாட்டில் கொள்முதல் செய்தால் அதன் உண்மை விலை தெரிந்துவிடும் என்று வட மாநிலங்களிலிருந்து தரமற்ற பொருள்கள் கொள்முதல்செய்யப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது அதிமுக ஆட்சி. ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் இன்றுவரை விடியலைத் தராமலே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

இது தொண்டர்களுக்கான தேர்தல், இந்தத் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வது அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரின் கடமை. 30 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைந்ததற்கு தொண்டர்களே காரணம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: இட்லி சுட்டு வாக்குச் சேகரித்த வேட்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.