ETV Bharat / state

1987ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் எழுந்த "ஒற்றைத் தலைமை" விவகாரம்... ஒரு விரிவான அலசல்...

author img

By

Published : Jun 18, 2022, 8:05 PM IST

Updated : Jun 18, 2022, 10:57 PM IST

எப்படி இருந்த இரட்டை இலை.. எவ்வாறு ஒற்றைத்தலைமைக்குள் சிக்கியது? - சிறப்பு அலசல்
எப்படி இருந்த இரட்டை இலை.. எவ்வாறு ஒற்றைத்தலைமைக்குள் சிக்கியது? - சிறப்பு அலசல்

1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற சர்ச்சை ஜானகி அம்மாளுக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையே எழுந்தது. இப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே எழுந்துள்ளது. இதில் யார் ஜெயலலிதா, யார் ஜானகி அம்மாள் என்பதை தொண்டர்களே முடிவு செய்ய வேண்டும்.

சென்னை: தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் 'ஈபிஎஸ் வாழ்க', ‘ஓபிஎஸ் வாழ்க’, ‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க!’, ‘நான் வேண்டாமென்று தான் கூறினேன்’, ‘ஈபிஎஸ், ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல்..’, ‘ஈபிஎஸ் ஆதரவாளர் மீது தாக்குதல்..’, ‘ஈபிஎஸ் ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை’ என்ற செய்திகளே கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதிலும், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இப்படியான சூழலில், அதிமுகவின் கடந்த கால ஒன்றைத்தலைமை போராட்டத்தை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அஇஅதிமுக, அவரது மறைவிற்கு பிறகு 1987ஆம் ஆண்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிளவுபட்டது.

மொத்தம் உள்ள 132 எம்எல்ஏக்களில் 33 பேர் மட்டுமே ஜெயலலிதா பக்கம் இருந்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்படி ஜானகி அணி வெற்றி பெற்றது. ஆனால், வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் நடந்த கலவரத்தை காரணம் காட்டி 4 நாட்களிலேயே அரசு கலைக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் இரட்டை இலை சின்னத்தை கோரியதால், சின்னம் முடக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் நடந்தது. ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டன. இறுதியில் ஜெயலலிதா அணி 27 இடங்களை கைப்பற்றினார். ஜானகி அணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார். அதிமுக வாக்கு வங்கி சிதறவே திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து ஜானகி அரசியலில் ஈடுபடாமல், தலைமை பொறுப்பை விட்டுக்கொடுத்தார். அந்த வகையில் இரட்டை தலைமை விவகாரம் முடிந்தது. இரட்டை இலை சின்னத்தையும் ஜெயலலிதா மீட்டு, அதிமுக பொதுச்செயலாளரானார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் ஜெயலலிதா முதலமைச்சராக உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் பனிப்போர்: ஆனால், ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம், ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பானது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகியது. 124 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்தனர். சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுவரை இல்லாத பதவிகள் அதிமுகவில் உருவாக்கப்பட்டன. அதில், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு இருவருக்கும் அதிமுகவின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் நாளடைவில் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவது செய்திகள் வாயிலாக கசியத்தொடங்கின. இந்நிலையிலேயே ‘ஒற்றைத்தலைமை’ என்ற விவகாரம் வெடித்தது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜெயக்குமாரின் ஓப்பன் டாக்: இந்த பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானங்கள் குறித்த விவாதம் கடந்த செவ்வாய்கிழமை (ஜூன் 14) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்பட மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்கூட்டம் உள்ளே சென்று கொண்டிருக்க, வெளியே ஒற்றைத்தலைமை குறித்த கோஷங்களை அதிமுகவின் தொண்டர்கள் எழுப்பத் தொடங்கினர். ரகளைகளும் நடந்தன.

ஒற்றைத் தலைமை காலத்தின் தேவை: இந்த கூட்டத்தில் பங்கேற்று வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கு பெரும்பான்மையானவர்கள் ஆதரவளித்துள்ளனர். இன்றையச் சூழலில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.

யார் அந்த ஒற்றைத் தலைமை என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்” எனத் தெரிவித்தார். இவ்வாறு ஜெயக்குமார் கூறிய அடுத்த சில மணி நேரங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை, ராமநாதபுரம் மற்றும் ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனி ஆகிய பகுதிகளில், “ஒற்றைத் தலைமை வேண்டும்; ஓபிஎஸ் தலைமை வேண்டும்' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டத் தொடங்கினர்.

இந்த போஸ்டர்களை ஈபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் கிழித்து விட்டதாக ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் போரட்டத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே ஜூன் 15ஆம் தேதி இரவு 8.13 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

தனித்தனியாக ஆலோசனை: இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக தங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தத் தொடங்கினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு குடியிருப்பிலும், அதிமுக தலைமை அலுவலகத்திலும் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக கடந்த ஜூன் 16ஆம் நாள், அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், செம்மலை, ஆர்.பி. உதயகுமார், வளர்மதி, ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரிடம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

அதேநேரம், எடப்பாடி கே.பழனிசாமி, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். இவ்வாறு சேலத்தில் ஈபிஎஸ், சென்னையில் ஓபிஎஸ் என்று தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

டிடிவி - ஜெயக்குமார் கருத்து மோதல்: இதற்கிடையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தற்போது இருக்கும் அதிமுக ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி. யார் அதிக முதலீடு செய்துள்ளார்களோ அவர்களுக்கு ஆதரவாக 'ஜே' போடுகிறார்கள். அதிமுகவை நாங்கள் மீட்டெடுப்போம். சசிகலா சட்டப் போராட்டத்தைத் தொடர்வார்” என செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார். இவ்வாறு அடுத்தடுத்து ஒற்றைத்தலைமை குறித்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியமான பேசுபொருளாக மாறியது.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு: இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசினர் குடியிருப்பில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ஓபிஎஸ், “கழகத்தை வழிநடத்தும் பொறுப்பு, ஒவ்வோரு அதிமுக தொண்டர்களால் தேர்தல் முறையில் பொதுச்செயலாளர் என்ற பதவி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே எம்ஜிஆர் விதிகளை உருவாக்கினார்.

இந்த சட்ட விதியானது, எந்த சூழ்நிலையிலும் எப்படியும் மாற்றப்படக் கூடாது. அவருக்குப் பிறகு 30 ஆண்டுகளாக ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தார். கழகத்தை அமைப்பு ரீதியாக வழிநடத்தி கட்சியின் சட்ட விதிப்படி கிளை, பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட கழகம், தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவி என்பது அவருக்கு மட்டுமே உரியது என்ற நோக்கத்தில் அவருக்குரிய அந்தஸ்தை நாங்கள் வழங்கினோம். அதன் பிறகு இரட்டைத் தலைமை என்ற அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

அப்போதே இந்த பதவிகளை ஏன் உருவாக்க வேண்டும் என நான் கேட்டேன். எனக்கு துணை முதலமைச்சர் பதவியோ அல்லது அமைச்சர் பதவியோ தேவையில்லை என்றும் கூறினேன்.

பிரதமரின் வேண்டுகோள்: எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து செயல்படும் தேவை அவசியமானது. அப்போதிருந்த அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், டிடிவி தினகரன் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு காப்பாற்றப்பட்டது.

'இரட்டைத் தலைமை' என்பது வெறும் பதவி மட்டுமே என்று கூறினார்கள். பிறகு, கழக நடவடிக்கையில் இருவரும் சேர்ந்து கையெழுத்து போட வேண்டும் என்று கூறினார்கள். அப்போது கழகம் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட நான் ஒப்புக் கொண்டேன்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், துணை முதலமைச்சர் என்ற பதவி வெறும் பெயரளவுக்கே இருந்தது. அதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரியும். அதற்கு முன்னதாக, டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோது அவரும் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தார். எனவே, இதனை ஏற்றுக் கொண்டேன்.

நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. இந்த இரட்டைத் தலைமை, ஒற்றைத் தலைமை என்பது ஏன் வந்தது? எனத் தெரியவில்லை. பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக முக்கியமான கூட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பிதழ் போய்க் கொண்டிருந்தது. ஜெயலலிதா காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்களாக இருந்தவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு ஏன் செய்யவில்லை என்று நான் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன். பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிதான் மாதவரம் மூர்த்தி என்பவரை பேச அழைத்தார். அவர்தான் ஒற்றைத் தலைமை குறித்து முதலில் பேசினார். அப்படியொரு திட்டம் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரான என்னிடமோ அல்லது பிறரிடமோ ஆலோசிக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில்தான் கட்சியில் ஒரு அறைக்குள் பேச வேண்டிய விஷயத்தை வெளியே பேசினார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவர் பேட்டி கொடுத்ததால்தான் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. நான் இந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எவ்வித சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காமல் மன நிறைவோடு பணியாற்றி உள்ளேன்.

ஜெயலலிதா உடல் நலமின்றி இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள்தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று சொன்னபோது கூட, மூன்று மாதங்களுக்கு மட்டும் இருக்கிறேன் என்று சொன்னவன் நான். தற்போதைய சூழ்நிலையில் கட்சி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நாம் எதிர்கட்சியாக செயல்படுகிறோம். எனவே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருகிறேன்.

நோ ஈகோ: இன்றைய காலக்கட்டத்தில் இரட்டைத் தலைமை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது அவர் மட்டுமே வகித்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது என்று பொதுக்குழு மூலம் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு முரணாக செய்வதாக இருந்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாக கருதப்படும். எத்தனையோ பிரச்னையில் நான் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியிருக்கிறேன்.

எனக்கு எந்த ஈகோவும் இல்லை. அவருடன் பேச நான் தயாராகவே இருக்கிறேன். இதற்கு முன்னதாக, ஒற்றைத் தலைமை குறித்து, நானோ எடப்பாடி பழனிசாமியோ ஒன்றாகவோ, தனியாகவோ பேசியதில்லை. கட்சிக்காக, தொண்டர்களுக்காகவுமே நான் விட்டுக் கொடுத்தேன். நான் அதிகாரப் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. தொண்டர்களுக்காகவே எப்போதும் விட்டுக் கொடுத்துள்ளேன்.

என்னை யாரும் ஓரம் கட்ட முடியாது. தொண்டர்களிடமிருந்து என்னை யாரும் பிரித்து விட முடியாது. அந்த அளவுக்கு தொண்டர்களோடு தொடர்பில் இருப்பவன் நான். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது” எனப் பேசினார்.

பொதுக்குழுவிற்கு தடை: இதற்கிடையில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென திண்டுக்கல், சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், “அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017 ஆம் ஆண்டில் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை.

அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பிரியா, ஜூன் 20 ஆம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பாளர்களுக்கு தடை: அதேநேரம் அதிமுக உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கை தொடர்ந்தனர். அதில், “கட்சி விதிகளின்படி நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் தடை விதிக்க வேண்டும். செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும்” எனத் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுக்குட்டியின் அடுக்கடுக்கான விமர்சனம்: நேற்று (ஜூன் 17) முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி, “அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன். நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. ஆட்சியில் இருந்தபோது பல முறை உள்ளாட்சித்தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் எஸ்.பி.வேலுமணியிடம் கேட்டபோதும் வழக்கு இருக்கின்றது என காரணம் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தனர்.

உள்ளாட்சித்தேர்தலை நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது.இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர். இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே விபத்தில் பதவிக்கு வந்து விட்டனர். இப்போது தனித்தனியாக ஆட்களை சேர்த்துக்கொண்டு இருவரும் சண்டை போடுவது சரியல்ல. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு, இவர்கள் எதுவும் செய்யவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஒதுங்கிக்கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமைப்பொறுப்பிற்கு வரட்டும்.

அதிமுக துரோக கட்சி: அதிமுக சோதனைகளைக் கடந்து வந்த கட்சி. இனி, இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இயங்க வாய்ப்பில்லை. தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள். அதிமுக துரோக கட்சியாக மாறி விட்டது. மேல் இருந்து கீழே வரை மாறிவிட்டனர். அதிமுகவில் கோஷ்டிகள் இருந்ததில்லை. எனக்கு சட்டப்பேரவைத்தேர்தலில் சீட் இல்லை என்றனர். என்னுடன் வேலுமணி பேச வில்லை. நான் ஒதுங்கிவிட்டேன்.

சசிகலா வர வேண்டும் என சொல்லவில்லை. அனைவரும் சேர்ந்து யாரையாவது தேர்ந்தெடுங்கள். ஒற்றைத்தலைமை வரட்டும். ஆனால், இவர்கள் இருவரும் வேண்டாம். சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும். அதிமுக விவகாரத்தில் பிரதமர் தலையீட்டை ஓ.பி.எஸ் நேற்று வெளிப்படையாக பேசி இருக்க கூடாது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுக இல்லை. இது போன்ற நிலை கட்சிக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். இப்போது வந்துவிட்டது’ எனத் தெரிவித்தார்.

பொன்னையன் திட்டவட்டம்: அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன், “அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஒன்றுமே விவாதிக்கவில்லை. ஒற்றைத் தலைமை குறித்து இரண்டு பேரிடம் கேளுங்கள். ஒற்றை தலைமைக்கான தீர்மானம் இருக்கிறதா, இல்லையா என்பது பொதுக்குழுவில் தெரிய வரும்.

உட்கட்சி தேர்தல் முடிவுக்கும் ஒற்றைத்தலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியில் ஒற்றைத்தலைமை எடுப்பது எந்த காலத்திலும் தவறில்லை. ஆனால், ஒற்றைத் தலைமை குறித்த முடிவை பொதுக்குழு எடுக்கும். பொதுக்குழு சிறப்பு அழைப்பாளர்களுக்கு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

பொன்னையன் பரபரப்பு பேட்டி

இந்நிலையில் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதிலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்த பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்துவை சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்ததால் என்னை ஈபிஎஸ் ஆதரவாளரா? எனக் கேள்வி கேட்டு தாக்கினர்” எனப் பதிலளித்தார்.

இந்த கூட்டம் நிறைவு பெற்று ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். இவ்வளவு சர்ச்சைகளுக்கு பிறகும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரது வீட்டிலும் முகாமிட்டு பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொண்டர்களின் முடிவே அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இரட்டை இலையா? இரண்டு இலையா? ஒற்றை தலைமையை நோக்கி நகரும் அதிமுக...!

Last Updated :Jun 18, 2022, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.