ETV Bharat / state

நில மோசடி செய்ததாக நடிகை கௌதமி மீண்டும் புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 10:22 PM IST

நிலத்தை மோசடி செய்ததாக நடிகை கௌதமி புகார்
நிலத்தை மோசடி செய்ததாக நடிகை கௌதமி புகார்

Actress Gautami: தனது சொத்துக்களை தனக்கே தெரியாமல் விற்று, வருமான வரித்துறையிடம் சிக்க வைத்துள்ளதாக, மூன்று பேர் மீது நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில் 80's காலத்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர், நடிகை கெளதமி. இவர் தற்போது கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் அமெரிக்காவில் படித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 46 ஏக்கர் நிலத்தை மூன்று பேர் மோசடி செய்து விற்று விட்டதாக, சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (செப்.27) மேலும் ஒரு புகாரை நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார். அதில், "1990ஆம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் என்ற கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை எனது பெயரிலும், எனது தாயின் பெயரிலும் வாங்கினேன். அதன் பிறகு எனக்கு புற்றுநோய் ஏற்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்ததால், எனது சொத்துக்களை நிர்வகிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க: ‘நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்’ - நீதிபதி எச்சரிக்கை!

இதனால், அழகப்பன் என்பவர் எனது சொத்துக்களை மேற்பார்வை செய்து வந்ததார். அப்போது அழகப்பன் என்னிடம் பலராமன், ரகுநாதன் ஆகிய இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். எனது சொத்துக்களை விற்பதற்கு அவர்களுக்கு பொது அதிகாரம் கொடுத்தேன்.

ஆனால், பொது அதிகாரம் பெற்ற நபர்கள் எனக்கு முன் தொகையாக 4 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே கொடுத்துவிட்டு, அதன் பிறகு அவர்கள் அந்த இடத்தை 11 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளார்கள். இந்த விவகாரம் எனக்கு தெரியாமலே இருந்து வந்தது. இது குறித்து எனக்கு தெரிய வந்ததையும் நான் புகார் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன்.

கடந்த 2021ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினர். அந்த நோட்டீஸில் எனது சொத்து ஒன்றை 11 கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்படுவதாகவும், அதற்கு இரண்டரை கோடி வரி கட்ட வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போதுதான் எனக்கு இந்த விவகாரம் குறித்து தெரிய வந்தது. இதனால் என்னை ஏமாற்றி, எனது சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த அழகப்பன், ரகுநாதன், பலராமன் ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்து உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.