ETV Bharat / state

காது கம்மல் ஓட்டை மறைய கிரீம் பூசியதால் அழுகிய காது.. சென்னை கமிஷனர் ஆபிஸில் பெண் பரபரப்பு புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 7:54 PM IST

Etv Bharat
Etv Bharat

காதில் கம்மல் போட்ட இடத்தின் ஓட்டையை அடைப்பதற்கான சிகிச்சை என தனியார் அழகு நிலையம் பரிந்துரைத்த கிரீமை பூசியதால் காது அழுகியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சூளைப் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக (Makeup Artists) வேண்டும் என்ற ஆர்வத்தில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் மூன் பியூட்டி பார்லர் அகாடமி என்று அழகு கலை பயிற்சி நிறுவனத்திற்க்கு சென்றுள்ளார்.

இதையடுத்து பயிற்சி வகுப்பு கட்டணமாக ரூ.2,499 ரூபாய் செலுத்தி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று வந்துள்ளார். அப்போது கம்மல் போட்ட காது துளைகளை அடைக்க என்ன செய்ய வேண்டும் என அழகு கலை பயிற்சி அளிக்கும் நிபுணர் மைமூனா என்பவரிடம் சுஷ்மிதா ஆலோசனை பெற்று வந்துள்ளார். இதையடுத்து ஏர்லோப் ரிப்பேரிங் லோஷன் என்கிற கிரீமை உபயோகப்படுத்தினால் போதும் கம்மல் போட்ட தொலை நாளடைவில் மறைந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சுஷ்மிதா, ஏர்லோவ் ரிப்பேர் லோஷன் (Earlobe Repairing Lotion) என்கிற கிரீமை பயன்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்கள் கழித்து இரண்டு காதுகளிலும் காயங்கள் ஏற்பட்டு பெரிதாகி உள்ளது. மேலும், காதின் கிரீம் பூசிவரப்பட்ட பகுதி அழுகிய நிலைக்கு போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுஷ்மிதா இது குறித்து மைமூனாவிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு முறையான பதில் சொல்லவில்லை என பாதிக்கப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுஷ்மிதா, முறையான மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதால் அழுகிய காது பகுதி சரியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து மூன் பியூட்டி அகாடமியில் அழகு கலை பயிற்சி அளித்த மைமூனாவிடம், சுஷ்மிதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் கேட்டபோது இருவரையும் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து திருவிக நகர் காவல் நிலையத்திலும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் சுஷ்மிதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் இன்று (நவ.29) புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மூன் பியூட்டி அகாடமி கலை பயிற்சி தரப்பில் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட கிரீமை உபயோகம் செய்யும்போது ஐந்து நாட்கள் வரை காதில் தண்ணீர் படக்கூடாது என தெரிவித்தும் இதை பொருட்படுத்தாமல் சுஷ்மிதா காதில் தண்ணீர் பட்டதால் தான் கம்மல் போட்ட இடம் அழுகி போனதாக பதில் அளித்துள்ளார். மேலும் போலீசார் தரப்பில் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முகத்தில் கரும்புள்ளியா..? கவலைய விடுங்க... இத ட்ரை பண்ணுங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.