ETV Bharat / state

Actor Vijay: சக்சஸில் முடிந்த 234.. விஜயின் அரசியலுக்கு விடியல் தருமா?

author img

By

Published : Jun 18, 2023, 10:00 PM IST

Etv Bharat
Etv Bharat

10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 1400 மாணவர்களை குடும்பத்தோடு அழைத்து, விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு 'அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்' என்பன உள்ளிட்டவாறு பேசிய நிலையில், விஜய் அரசியலுக்கு வருவாரா? என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அப்படியெனில், அதற்கான முதல் அஸ்திவாரமாக இந்த விருது வழங்கும் விழா அமைந்ததாக என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பு அலசுகிறது.

சென்னை: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் புதியதோர் முயற்சியை நிகழ்த்தியுள்ளார், நடிகர் 'விஜய்' (Actor Vijay). கிட்டத்தட்ட 13 மணி நேரம் தனி ஒருவனாக நின்று அத்தனை மாணவர்களுக்கும் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். கேரவன் இல்லை, டச் அப் இல்லை, இயக்குநர் இல்லை, ஆக்ஷன் கட் இல்லை. இப்படி எந்தவொரு நடிகரும் இதுநாள் வரை செய்யாத செயலை செய்து பேசுபொருள் ஆகியுள்ளார்.

நடிகர் விஜய் 'தளபதி' (Thalapathy) என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படுபவர். தமிழ் சினிமாவின் இன்றைய அளவில் சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமா மார்க்கெட்டில் ஓடும் குதிரை விஜய். தயாரிப்பாளர்கள் தேடும் நடிகர். இப்படி எத்தனையோ பெருமைகளை தன்னிடத்தில் வைத்துள்ளவர். தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நல்லது செய்து வருகிறார். மாநிலம் தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. பால் கொடுப்பது, உணவு வழங்குதல் என உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் மனதில் அரசியல் எண்ணம் துளிர்விட்டுள்ளது.

இதனால், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். முன்னதாக, நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' (Vijay Makkal Iyakkam) சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் கணிசமான அளவில் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இது விஜய்க்கு புது உற்சாகம் அளித்தது. உடனடியாக விஜய், அவர்களை வரவழைத்தும் பாராட்டியுள்ளார். சமீபத்தில் மாநிலம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த விழா மூலம் அரசியலுக்கு முதல் அடியை எடுத்து வைத்துள்ளாரா?
இந்த விழா மூலம் அரசியலுக்கு முதல் அடியை எடுத்து வைத்துள்ளாரா?

விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில், இது நடத்தப்பட்டது. உலக பட்டினி தினத்தை (World Hunger Day) ஒட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இப்படி மெல்ல மெல்ல தனது காய்களை நகர்த்தி வந்தார், விஜய். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்க விஜய் முடிவு செய்தார். இதற்காகத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளைத் தேர்வு செய்யப்பட்டது. அவர்களை நேரில் அழைத்துப் பாராட்ட விஜய் முடிவு செய்தார். இதற்காக மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை வரவழைக்கப்பட்டு அவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி (Thalapathy Vijay Education Award Ceremony 2023) நேற்று நடைபெற்றது.

தொகுதிக்கு 6 பேர் என்றால் கிட்டதட்ட 1400 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். காலை 10.30 மணிக்கு வந்த விஜய், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலாவதாகத் திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு 'வைர நெக்லஸ்' (Diamond Necklace) பரிசளித்தார். இதனைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். கிட்டதட்ட 13 மணி நேரம் நின்று அத்தனை பேருக்கும் பரிசு வழங்கினார். எந்தவித முக சுழிப்பும் இல்லாமல் அவர்கள் சொன்ன வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு நீண்ட நேரம் நின்றார். இதனால், சமூக வலைத்தளங்களில் விஜய்க்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.‌

12 வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நகை வழங்கிய விஜய்
12 வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நகை வழங்கிய விஜய்

தற்போதைய காலகட்டத்தில், இதுபோன்று யாரும் இதுவரை செய்ததில்லை என்பதே உண்மை. இதனை விஜய் அரசியலாகப் பார்க்கிறாரா? அல்லது அரசியல் ஆக்கப் பார்க்கிறாரா? என்றவாறு ஒருபுறம் விவாதிக்கப்பட்டாலும் இத்தனை மணி நேரம் நின்று தனக்காக வந்த மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களை மகிழ்வித்ததே ஒரு சாதனை தான் எனலாம். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் இப்படிச் செய்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது‌.

விழா மேடையில் பேசிய விஜய், 'அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் படியுங்கள்' என்று பேசினார். அங்கே வந்திருந்த மாணவர்கள்தான் அடுத்த தலைமுறை வாக்காளர்கள். எதை எப்போது யாரிடம் பேச வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட விஜய் அதனைச் சரியான சமயத்தில் பேசி ரசிக்க வைத்தார். 1400 பேர் மட்டுமல்ல 1400 குடும்பங்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பேசியுள்ளார். மாற்றத்திற்கான விதையை நேற்று நடந்த விழாவில் விதைத்துள்ளார், விஜய். அதன் பலனை இன்னும் பத்து ஆண்டுகளில் அறுவடை செய்வார் என்று நம்பலாம். நேற்று வந்த மாணவ மாணவிகள் சிலரும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர். அவர்களது பெற்றோர்களும் அதனையே கூறினர்.

அரசியலுக்கு வரவேண்டும் என விஜய்க்கு கோரிக்கை வைத்த மாணவர்
அரசியலுக்கு வரவேண்டும் என விஜய்க்கு கோரிக்கை வைத்த மாணவர்

தமிழகத்திற்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. இதுதான் விஜய்யின் நோக்கமாகக் கூட இருந்திருக்கலாம். விழாவில் பேசிய ஒரு மாணவியின் தந்தை கூறும்போது, '1-ல் இருந்து 10 வரை உள்ள எண்களில் விஜய் வெல்ல வேண்டியது, மூற்றே‌ மூன்று எண்கள் தான். அது 234 என 234 தொகுதிகளைக் குறிப்பிட்டு பேசினார். அதற்கு அரங்கில் பலத்த கரகோஷம் கிடைத்தது. இதிலிருந்து விஜய்யின் எண்ணம் என்ன என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆனாலும், விஜய் பேசும்போது எனக்கு தெரிந்தது சினிமாதான் அப்புறம் அதைப் பற்றி அப்புறம் பேசலாம் என்றார். ஒருவேளை இன்னும் பத்து ஆண்டுகளில் அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் தொடங்குவார். அதற்காகத்தான் இப்போது இருந்தே தனக்கான வாக்காளர்களை இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் தேர்வு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இவர்கள் தான் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் என்பதை நன்றாக உணர்ந்த விஜய் இவர்கள் தான் நமது வாக்காளர்கள் என்பதை உணர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் என்கிறார்கள் சிலர். இது அரசியல் ஆதாயமாகக் கூட இருக்கலாம்; ஆனாலும், எவருக்கும் தோன்றாத ஒன்றை விஜய் நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதுவே மிகப் பெரிய சாதனை தான். வருங்கால வாக்காளர்களை மனதில் வைத்து விஜய் செய்துள்ள இந்த செயல் அவருக்கு எந்தவிதத்தில் பலன் தரும் என்பதை காலம்தான் சொல்லும். அதுவரையில் காத்திருப்போம்.

'அரசியலுக்கு வருவேன்' என்று சொல்லிக் கொண்டிருந்த ரஜினி பின்வாங்கிவிட்டார். கமல் தொடங்கிய கட்சியோ தள்ளாடி வருகிறது. விஜயகாந்த் கட்சி கானல் நீராகி வருகிறது. எம்ஜிஆருக்குப் பிறகு சினிமாவில் இருந்து வந்தவர்கள் காணாமல்போன நிலையில் விஜய் அரசியலுக்கு வருவாரா? அப்படி வந்தால் எப்படி தற்போது உள்ள சூழ்நிலையைச் சமாளிப்பார் என்பதைப் போகப் போகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? - எடப்பாடி பழனிசாமி ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.