ETV Bharat / state

சென்னையில் திடீர் வெடி விபத்து... மர்ம பொருள் வெடித்ததால் பெண் படுகாயம்.. என்ன காரணம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 1:35 PM IST

சென்னையில் மர்ம பொருள் ஒன்று  வெடித்ததால் பரபரப்பு!
சென்னையில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததால் பரபரப்பு!

சென்னை கொடுங்கையூரில் குப்பை தொட்டியில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் பெண் காயம் அடைந்தார். சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூரில் அன்னை சத்யா நகர் முதல் தெருவில் குப்பை தொட்டியில் மர்மப் பொருள் வெடித்ததில் பெண் காயம் அடைந்தார். சத்யா நகர் ரயில்வே பாதை அருகே குப்பையை கொட்ட சென்ற போது மர்மப் பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் லிங்கப்பூ என்ற பெண்ணுக்கு கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து லிங்கப்பூ சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடயவியல் அறிவியல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கொடுங்கையூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த லிங்க பூ என்கிற 54 வயது மதிக்கத்தக்க பெண் இன்று (செப். 16) காலை குப்பை கொட்டுவதற்காக அப்பகிதிக்கு சென்று இருக்கிறார்.

அப்போது அந்த இடத்தில் இருந்து மர்ம பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண்ணுக்கு கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து உடனடியாக அவருடைய கணவர் சந்திரன் என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார்.

தற்போது லிங்கப்பூவுகு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்த பின், சம்பவ இடத்தில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். பழைய பேட்டரி மற்றும் கெமிக்கல் அடங்கிய பொருட்கள் வெடித்ததே இதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தினர். வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பிளாஸ்டிக் பக்கெட், மற்றும் சில முக்கிய பொருட்களை சேகரித்து, விசாரணைக்காக வெடிகுண்டு நிபுணர்கள் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரடியாக விரைந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் திடீரென வெடித்த மர்ம பொருளால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: டெங்கு மற்றும் நிபா வைரஸ் எதிரொலி .. கன்னியாகுமரியில் முககவசம் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.