ETV Bharat / state

டெங்கு மற்றும் நிபா வைரஸ் எதிரொலி .. கன்னியாகுமரியில் முககவசம் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 10:18 AM IST

Updated : Sep 16, 2023, 10:57 AM IST

dengue-and-nipah-virus-reverberation-important-announcement-of-face-mask-compulsion
டெங்கு மற்றும் நிபா வைரஸ் எதிரொலி ..முககவசம் கட்டயம் வெளியான முக்கிய அறிவிப்பு

நிபா வைரஸ் பரவலை தடுக்க கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்றும் கேரளாவில் இருந்து வருபவர்களிடம் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.

வைரஸ் எதிரொலி தடுப்பு பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி: கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடர்பில் இருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் ரத்த மாதிரிகள் நிபா தொற்று பரிசோதனைக்காக புனேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் மற்றும் உறவினா் என 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 5 ஆவது நபர் கண்டறியப்பட்டு உள்ளார். அவர் 24 வயதான சுகாதாரப் பணியாளர் என்பது தெரிய வந்துள்ளது. நிபா பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்ட 77 நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தொடர்பில் இருந்த 700 பேரின் உடல் நிலையை அரசு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் நிபா வைரஸ் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் முக்கிய வழி தடங்களான களியக்காவிளை, கோழிவிளை, காக்காவிளை, பளுகல் மற்றும் நெட்டா ஆகிய 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து சுகாதார ஆய்வாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் பரிசோதனை நடத்தி நோய் அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

மேலும், இந்த கூட்டத்தில் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் மூலம் நோய் கண்காணிப்பு பணி முழுமையான அளவில் நடைபெற்று வருவதுடன் அதன் மூலம் சந்தேகப்படும் நோயாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து பணி நிமித்தமாக கன்னியாகுமரிக்கு வரும் பொதுமக்களை கண்டறிந்து தொடர் கண்காணிப்பில் இருக்க செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

மேலும், குமரி மாவட்டத்தில் தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், சளியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் 65 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மாவட்ட முழுவதும் தினசரி நான்கு நபர்களுக்கு மேல் டெங்கு காச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 318 கொசு ஒழிப்பு பணியாளர்களும், மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தவிர அனைத்து வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியும் தொடங்கி உள்ளது, மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கேரள பயிற்சி மருத்துவர் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சலால் உயிரிழப்பு!

Last Updated :Sep 16, 2023, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.