ETV Bharat / state

'2021 சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கௌரவப் பிரச்னை'- தினேஷ் குண்டுராவ்

author img

By

Published : Sep 25, 2020, 5:10 PM IST

congress dinesh gundurao  congress district meeting  thirunavukarasu ks alagiri fight
2021-சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கௌரவப் பிரச்னை'- தினேஷ் குண்டுராவ்

சென்னை: வருகின்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கௌரவப் பிரச்சினையாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கியது. இதில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆற்ற வேண்டிய பணி குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, "தமிழ்நாடு அரசியல் சூழலை தெரிந்துகொள்ள தினேஷ் குண்டுராவ் வந்துள்ளார். அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பு ஏற்றவுடன் மக்களவைத் தேர்தலில் வெற்றிகளைப் பெற்றுள்ளோம். காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் நாட்டை காப்பாற்ற முடியும். நீண்ட காலத்திட்டம், குறைந்த காலத் திட்டம் ஆகியவற்றை கே.எஸ். அழகிரி திட்டமிட வேண்டும்.

அவர் தலைமையில் நாம் பயணிக்க வேண்டும். கூட்டணியில் உரிய பங்கீடு கிடைக்க அனைத்து மாவட்டத் தலைவர்களும் தங்களது பலத்தை சிறப்பாக காட்டவேண்டும். தற்போது நமக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைந்துள்ளன. அதனை அதிகப்படுத்த பாடு படவேண்டும். வாக்குச்சாவடி ஆளவிலான பணிகளை நாம் தொடங்கத் தயாராக வேண்டும்" என்றார்.

"தொகுதிகள் எண்ணிங்கை, இடங்கள் குறித்தெல்லாம் நாம் இப்போது பேசவேண்டியதில்லை. பேசவும் கூடாது. நமது கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும். தேர்தல் நேரத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய நிலையுள்ளது. முன்பெல்லாம் அடிக்கடி மாநிலத் தலைவர்கள் மாறுவார்கள். தற்போது மாவட்டத் தலைவர்கள் மாறுவது அதிகரித்துள்ளது.

இந்தநிலை மாறவேண்டும். மாவட்ட நிர்வாகிகள் அடிக்கடி மாற்றப்படுவதால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படலாம். எனக்கும் அழகிரிக்கும் சண்டை இல்லை..சிறிய குழப்பங்கள் உள்ளது. அது சரியாகிவிடும்" என திருநாவுக்கரசர் முடிக்க ஜாலியாக பேசத்தொடங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

" நாங்க எப்போவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில தலையிடமாட்டோம். நீங்க பெரிய மீன்கள். நாங்க சின்ன மீன்கள். பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் என் மீது மிகுந்த பாசம் உள்ளது. அதனால்தான் எப்போது என் ஆட்சி கவிழும் என பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி கரோனா ஒன்று புதுச்சேரியில் உள்ளது. அதனைச் சமாளிப்பதே ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. எங்களுக்கு எதிர்கட்சிகளே இல்லை. ஆனால், நரேந்திர மோடி எங்களுக்கு எதிராக அனைத்துப் பிரச்னைகளையும் கொடுக்கிறார்" என்று கிரண்பேடியை சாடி பேசிமுடித்தார்.

"தேர்தலைச் சந்திக்க குண்டுராவ் நான் உள்பட யாரும் உதவ முடியாது. களத்தில் இறங்கி பணியாற்றினால் மட்டுமே தேர்தலைச் சந்திக்க முடியும். களத்தில் இறங்கி ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பேர் வீதம் பணியாற்ற வேண்டும். வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை தேவை அனைவரும் நம்பிக்கை வையுங்கள். திருநாவுக்கரசர் ஒரு நல்ல வழக்கறிஞர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இத்தனை சிறப்பாக வாதாடுவார் என இப்போது தெரிகிறது. வெற்றிக்கனியை சோனியாவிடம் கொடுக்கத் தயாராகுங்கள்" என்றார் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடுத் தலைவர் கே.எஸ். அழகிரி.

இறுதியாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "தமிழ்நாட்டில் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தங்களின் யோசனைகள் மற்றும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கௌரவப் பிரச்னை. காங்கிரஸ் கட்சி பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கமுடிகிறது. ஆனால், ஆட்சி அமைக்க முடியவில்லை. நாம் மரியாதையைக் கோரக்கூடாது. மரியாதை கிடைக்கும்படி செய்யவேண்டும். தமிழ்நாடு மக்கள் காந்தி குடும்பத்தினரை மதிக்கின்றனர். ஆனால், நமக்கு பொறுப்புகளை கொடுக்க அனைவரும் முன்வரவில்லை.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நம் கட்சியினர் வெல்ல வேண்டும். காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அடிப்படைத் தலைவர்கள் வலிமையாக இல்லாவிட்டால், மாநிலத்தலைவர்கள் வலிமையாக இருக்கமுடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். யாருக்கு யாருக்கு ஆதரவாளர்கள் என்பது இங்கு பிரச்னை இல்லை.

மக்கள் மத்தியில் வெற்றி பெறவேண்டும் என்பதே முக்கியம். பொருப்புகளில் இருக்கும் அனைவரும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். அப்படி பணியாற்றினால் மக்களிடம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். மாவட்ட பொறுப்பாளர்கள் உங்கள் கடமைகளை முறையாக செய்தல் வேண்டும். நாம் நமது இலக்கை நோக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டும், வரும் தேர்தல் காங்கிரஸ் கட்சியினருக்கு கௌரவப் பிரச்சினையாக உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் நமது கட்சிக் கொடிகள் போஸ்டர்கள் மக்களுக்கு தெரியும் படி வையுங்கள்.

மக்களைச் சந்தித்து பேசுங்கள். சாமானிய மக்களின் பிரச்சினைகளை கண்டறியுங்கள். அவர்களின் மேம்பாட்டிற்கு என்ன செய்வது எனப் பாருங்கள். மக்கள் மத்தியில் கட்சிக்கு நல்ல பெயரை எடுங்கள். ஒவ்வொரு வீட்டின் கதவுகளில் ஆரம்பித்து வீதிகள் தோறும் காங்கிரஸ் கட்சியை கொண்டு செல்லுங்கள்" என்றார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சியமைக்க பக்கபலம் - தினேஷ் குண்டுராவ் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.