ETV Bharat / state

15 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 7:01 PM IST

குருப் 1, 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியீடு
குருப் 1, 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியீடு

TNPSC Group exam results: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 பணியிடங்களில் 5,777 பேர் தேர்வு செய்வதற்கான முடிவுகளை ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குருப் 2 பணியிடங்களில் 5,777 பேர் தேர்வு செய்வதற்கான முடிவுகளை ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 1 (குருப் 1) மூலம் 95 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்பது உள்ளிட்ட 15 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

மேலும் 2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதற்கான கால அட்டவணையை, அதன் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 மற்றும் 2ஏ பணிகளில் 5,777 இடங்களை நிரப்ப உள்ளது. அதற்கான முதல்நிலைத் தேர்வு 2022 மே 21ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 ஜூன் மாதம் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முதன்மை எழுத்துத்தேர்வு 2023 பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முடிவுகளை ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 1 ( குருப் 1) மூலம் 95 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2022 நவம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன் முதன்மைத் தேர்வுகள், 2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள், 2023 ஜூலை மாதம் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு, 2023 ஏப்ரல் 20ஆம் தேதி நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வுகள் 2023 நவம்பர் 21, 22 தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

முதன்மை வனக்காவலர் பணி குருப் 1 நிலையில் 9 பேர் நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு, அக்டோபர் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும். மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேர் நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு, 2023 நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெள்ள நிவாரண நிதி: தமிழக அனைத்து கட்சி எம்.பி-கள் அமிஷ்சாவை சந்திக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.