ETV Bharat / state

பெரம்பலூர் தொழிற்சாலையால் 10,000 பேருக்கு வேலை - அமைச்சர் சொன்ன தகவல்

author img

By

Published : Mar 18, 2023, 4:05 PM IST

Etv Bharat
Etv Bharat

பெரம்பலூரில் புதிய தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதன் மூலம் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்பதற்கு "நான் முதல்வன்" திட்டத்தில் பயிற்சியளிக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்: வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையில் "நான் முதல்வன் திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அரியலூரில் இன்று (மார்ச்.18) நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை வகித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலைவாய்ப்பு முகாம்கள்: இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணியமர்வு உத்தரவுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்கள் ஆண், பெண் இருபாலரும் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் தனித்துவமான முயற்சி: இதன் மூலம் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் வாயிலாக வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, இளைஞர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உயர்த்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம் ஆனது வேலை கொடுப்பவர் மற்றும் வேலை தேடுபவர்களை ஒரு குடையின்கீழ் இணைக்க தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த முன் முயற்சியாகும்.

இம்முகாம்களில் இளைஞர்களின் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு பணியமர்வு செய்யப்படுகின்றனர். வட்டார அளவில் ஏற்கனவே, நடைபெற்ற பணி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றவர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இம்முகாமில் பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த 56 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் வேலைவாய்ப்பு வேண்டி 1410-க்கும் மேற்பட்ட இளைஞர்களில் 149 இளைஞர்கள் தனியார் துறைகளில் பணிக்கு செய்ய தேர்வாகி உள்ளனர். இதில் 65 இளைஞர்களுக்கு இன்று நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு அடுத்தக்கட்ட தேர்வு நடைபெற்ற பின் ஆணை வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர் சிவசங்கர், 'தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அலுவல் பணிகளுக்கிடையே நம்முடைய அடுத்த தலைமுறையை தயார்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதாக கூறினார. குறிப்பாக, எதிர்கால தலைமுறையின் கல்வியினை வலுப்படுத்தும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அரசு மேல்நிலைப்பள்ளிகளை மேம்பாடு செய்யும் வகையில் ரூ.7500 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்திருப்பதாக தெரிவித்தார்.

நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி: அடுத்ததாக, கல்லூரி கல்வித் திட்டத்தை வலுப்படுத்துவதற்காகவும் கல்லூரிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைக்காகவும் ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும், கல்விக்கு நிதி ஒதுக்கியது போல், அடுத்த நடவடிக்கையாக கல்லூரி முடித்த மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் பெயரை சொல்லும் பொழுதே தன்னம்பிக்கை உண்டாவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

அந்தவகையில், நாம் பெறுகின்ற கல்வி ஏட்டுக் கல்வியாக இல்லாமல் நம் வாழ்க்கைக்கு தேவையான வேலைவாய்ப்பிற்கு தேவையான பயிற்சிகள் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், இதை செயல்படுத்தியதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும் இயலும் என்று அவர் தெரிவித்தார்.

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: அதற்காக தொழிற்துறையின் சார்பில் அதிகப்படியான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர், இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது, புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி சென்றதன் மூலம் புதியதாக 10,000 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் கிடைத்துள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன்மூலமாக, ஓராண்டுக்குள் நம்முடைய பகுதியில் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமைப்பதற்கு பள்ளிக்கல்வி முதல் திறன் மேம்பாடு, புதிய வேலைவாய்ப்பு என திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் கனவை நினைவுபடுத்தும் வகையில் இந்த மாதிரியான வேலைவாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசு கலைக்கல்லூரிக்கு வரும் மாணவ மாணவியர்கள் தற்பொழுது மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளதை கருத்தில்கொண்டு, குறுகிய சாலைகளை சரி செய்தபின் விரைவில் அரசு கலைக்கல்லூரி வரை பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என அவர் பேசினார். அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி, இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சிறுதானிய சந்தை வளர்ச்சியால் 2.5 கோடி விவசாயிகள் பலன் - சர்வதேச சிறுதானிய மாநாட்டில் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.