ETV Bharat / sports

உலகின் உச்சியில் இருக்கிறேன் -  உச்ச மகிழ்வில் தங்க மங்கை

author img

By

Published : Aug 30, 2021, 2:05 PM IST

தங்க மங்கை அவனி லெகாரா
தங்க மங்கை அவனி லெகாரா

என்னால் இந்த தருணத்தை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. தற்போது நான் உலகத்தின் உச்சியில் இருப்பதுபோல் உள்ளது என பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாரா தெரிவித்துள்ளார்.

டோக்கியோ: 2012ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, 11 வயது சிறுமியின் முதுகுத்தண்டை பதம்பார்த்ததுடன் அவரைச் சக்கர நாற்காலிக்குத் தள்ளியது. அந்த விபத்து கொடுத்த ரணத்துடன் ஒன்பது ஆண்டுகள் கழித்து அமர்ந்த வண்ணம் அந்தச் சிறுமி பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து தங்க மங்கையாக ஜொலிக்கிறார்.

அவர்தான் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கம் பெறும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தங்கப்பதக்கம் வென்றது மட்டுமில்லாமல், இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலகச் சாதனையைச் சமன்செய்து மிரட்டியுள்ளார்.

குதூகலத்தில் அவனி

பல்வேறு இடர்களைத் தகர்த்து, தங்கம் வென்றது குறித்து அவனியிடம் கேட்டபோது, "என்னால் இந்தத் தருணத்தைச் சொற்களால் விவரிக்க முடியவில்லை. தற்போது நான் உலகத்தின் உச்சியில் இருப்பதுபோல் உணர்கிறேன்" எனக் குதூகலித்தார்.

ஒரு நிதானத்திற்கு வந்தபின் அவனி பேசுகையில், "நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த ஒரு வாய்ப்பில் இலக்கில் சுட்டே ஆக வேண்டும். வேறு ஒன்றும் என் சிந்தனையில் இல்லை. அந்த ஒரு வாய்ப்பில் சுட்டால்தான் உண்டு என்ற நிலையில், அதை அடைந்துவிட்டேன்.

பதக்கத்தை குறித்தோ, வேறொன்றை குறித்தோ நான், நினைக்கவே இல்லை. இனி மேலும், இதேபோல் இருந்துவிட வேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவின் பெருவெற்றியில், நானும் பங்காற்றி உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

துப்பாக்கி எனக்கு மிகவும் நெருக்கமானது

நான் துப்பாக்கியைத் தூக்கினாலே ஒரு வீட்டு உபயோகப் பொருளைத் தூக்குவது போன்றுதான் இருக்கும். அது எனக்கு அந்தளவிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகிவிட்டது. கவனமாகவும், நிலையாகவும் விளையாடுவதுதான் துப்பாக்கிச்சுடுதல்.

2015 கோடைக்கால விடுமுறையில் எனது தந்தை துப்பாக்கிச்சுடுதல் அரங்கிற்கு அழைத்துச் சென்றார். அதன்பின், முதலில் அதைப் பொழுதுபோக்காகத்தான் எடுத்து விளையாட ஆரம்பித்ததன் விளைவாகத் தற்போது இந்த உயரமான நிலைக்கு வந்துள்ளேன்" என்றார்.

இதற்குமுன், பாரா ஒலிம்பிக்கில் இந்தியா நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது. நீச்சல் வீரர் முரளிகாந்த் படேகர் (1972), ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா (2004, 2016), உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு (2016) ஆகியோர் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வரலாற்றுச் சாதனை: தங்கம் வென்ற முதல் பெண் அவனி லெகாரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.