ETV Bharat / sports

விளையாட்டு வாழ்க்கையின் திருப்புமுனை எது? - நீரஜ் சோப்ரா விளக்கம்

author img

By

Published : Aug 10, 2021, 8:07 PM IST

Neeraj Chopra, நீரஜ் சோப்ரா
Joining national camp was turning point in my career: Neeraj Chopra

தேசிய பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டதுதான் விளையாட்டு வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

டெல்லி: டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இத்தொடரில், இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என ஏழு பதக்கங்களை பெற்று இருந்தது. இதில் ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தியா தடகளப் பிரிவில் பெறும் முதல் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய முகாமில் நான்...

டோக்கியோவில் இருந்து நீரஜ் சோப்ரா நேற்று (ஆக.9) இந்தியா வந்ததையடுத்து, இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) அவருக்கு பாராட்டு விழாவை இன்று (ஆக.10) ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நீரஜ்,"2015-16ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுகளுக்குப் பிறகு, நான் தேசிய பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதுதான் என் விளையாட்டு வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. அதற்கு முன்னர், நானே சமைத்துத்தான் பயிற்சியை மேற்கொண்டு வந்தேன்.

தேசிய முகாமிற்கு வந்தபின் பல வசதிகளை பெற்றேன். மூத்த வீரர்களை பார்த்துத்தான் நான் ஊக்கம் பெற்றேன். நாட்டின் சிறந்த வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டது வித்தியாசமான உணர்வை அளித்தது. கடினமாக பயிற்சி எடுத்ததால் பதக்கம் கிடைத்தது.

வெற்றியின் மதிப்பு

ஒவ்வொரு வீரருக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது பெருங்கனவாக இருக்கும். ஒலிம்பிக் போட்டி இவ்வளவு கடினமாக இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. என்னைவிட சிறந்த வீரர்கள் போட்டியிட்டார்கள். அவர்களை விட சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் என்னால் தங்கம் வெல்ல முடிந்தது.

நான் கனவு காண்பதாகவே நினைத்தேன். என் கையில் தங்கப்பதக்கம் இருப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் இந்திய வந்தபின் மக்கள் அளித்த மரியாதையை பார்த்த பிறகுதான் வெற்றியின் மதிப்பு புரிந்தது.

அனைவருக்கும் நன்றி

இந்திய தடகள கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் (SAI), ஒலிம்பிக் போடியம் இலக்கு திட்டம் (TOPS), இந்திய ராணுவம், எனது ஸ்பான்சர் ஜேஎஸ்டபிள்யூ (JSW SPORTS) மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கரோனா பெருந்தொற்று காளத்திலும் தடகள கூட்டமைப்பு எனது பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது பெரும் உதவியாக இருந்தது" என்றார்.

இதையும் படிங்க: நீரஜ் வென்ற தினம்... தேசிய ஈட்டி எறிதல் தினம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.