ETV Bharat / sports

ENG vs IND: இரண்டாம் நாளில் இங்கிலாந்து நிதான ஆட்டம்

author img

By

Published : Aug 26, 2021, 6:19 PM IST

Updated : Aug 26, 2021, 7:14 PM IST

ENG vs IND
ENG vs IND

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை முன்னர்வரை, இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்துள்ளது.

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவானது. அடுத்த, இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று (ஆக. 25) தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் நாள் ஆட்டம்

அதன்படி, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் (40.4 ஓவர்கள்) அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரோஹித் 19 ரன்களையும், ரஹானே 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சுத் தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் - ராபின்சன், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், நேற்றைய ஆட்டத்தின் இரண்டாம் செஷனின் பாதியில் இருந்து இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. மேலும், நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்து, இந்திய அணியை விட 42 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடக்க வீரர்கள் ஹமீத், பர்ன்ஸ் ஆகிய இருவரும் அரை சதம் அடித்து களத்தில் இருந்தனர்.

ஒருவழியாக விழுந்தது விக்கெட்

இந்நிலையில், ஹமீத் 58 ரன்களுடனும், பர்ன்ஸ் 52 ரன்களுடனும் இன்றைய இரண்டாம் நாள் (ஆக. 27) ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரோரி ஜோசப் பர்ன்ஸ் 61 ரன்களில் ஷமி பந்துவீச்சில் போல்டானார். இதையடுத்து, மூன்றாவது வீரராக டேவிட் மலான் களமிறங்கினார்.

தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்ததால், ஹமீத் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிக்காட்டினார். மறுபுறம் மலான் சீராக ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார்.

ஹமீத் அவுட்

ஹமீத் நிதானம் காட்டியதை கண்ட கோலி, ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார். இந்த தொடரில், ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், ஜடேஜா வீசிய 63ஆவது ஓவரில் ஹமீத் 68 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இன்று ஹமீத் சந்தித்த 65 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

இதையடுத்து, கேப்டன் ரூட் களமிறங்கி டேவிட் மலான் உடன் இணைந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சை நேர்த்தியாக விளையாடினர். இதன்மூலம், மதிய உணவு இடைவேளைக்கு முன்னர்வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி, இந்தியாவைவிட தற்போது 104 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்ட நிலையில், 8 விக்கெட்டுகளும், முழுமையாக இரண்டு செஷன்களும் கைவசம் இருப்பதால் 350 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் நிலவரம்

முதல் செஷன்: இங்கிலாந்து - 26 ஓவர்கள் - 62/2

Last Updated :Aug 26, 2021, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.