ETV Bharat / sports

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்-அரையிறுதியில் சுமித் நாகல் தோல்வி!

author img

By

Published : Feb 18, 2023, 8:03 PM IST

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்

சென்னை: தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடந்து வரும் இப்போட்டியில், 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், பிரிட்டன் வீரர் ஜே கிளார்க்குடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சுமித் நாகல், அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் இன்று (பிப்.18) அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் மொரீனோ டி ஆல்பர்னுடன், சுமித் நாகல் மோதினார். இதில் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் நாகலை வீழ்த்திய அமெரிக்க வீரர் மொரீனோ, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் இருந்து, இந்திய வீரர் சுமித் நாகல் வெளியேறியுள்ளார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் சுவீனியை, சக நாட்டு வீரர் பர்சில் எதிர்கொண்டார். இதில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில், பர்சில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். நாளை (பிப்.19) நடைபெறும் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் நிக்கோலஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பர்சில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இதையும் படிங்க: CCL 2023: சென்னை ரைனோஸ் Vs மும்பை ஹீரோஸ் இன்று மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.