ETV Bharat / sports

பறக்கத் தெரியாத கிவிகளை பறக்க வைத்த வில்லியம்சன்!

author img

By

Published : Jul 18, 2019, 8:46 PM IST

வில்லியம்சன்

தமிழ்நாட்டில் பிறந்ததாலோ என்னவோ கருப்பு மீது என்றும் ஒரு தீரா வாஞ்சை இருந்துகொண்டே இருக்கும். அதனால்தான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மீது எப்போதும் ஒரு ப்ரியம். நியூசிலாந்து...!

நியூசிலாந்து நாடு பல அதிசயங்களைக் கொண்டது. அதில் என்னை கவர்ந்த அதிசயம் கிவி பறவை. பறக்க முடியாத ஒரு உயிரினத்திற்கு பறவை என அடையாளம்கொடுத்து, தேசிய பறவையாக ஏற்றுக்கொண்டவர்கள் நியூசிலாந்து மக்கள். ஆனால் அந்த பறவைதான் இந்த உலகக்கோப்பை என்னும் வானில் மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தி அதீத உயரத்தில் பறந்தது. அந்த பறவைக்கு சிறகுகளை கொடுத்து பறக்க வைத்தவர் நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கேன் வில்லியம்சன்...!

வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை ’0’ ரன்னில் வீழ்த்திய இங்கிலாந்து அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, வில்லியம்சன் என்னும் மனிதர் எந்தவொரு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் சிரித்த முகத்தோடு இருந்தது ரசிகர்களை இன்னும் அதிகமாய் ஈர்த்தது. வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வில்லியசனுக்கு கிரிக்கெட் ஆட வந்ததற்கு முன்னதாகவே வந்துவிட்டது. 'sucess is spending a time out in the middle' என்ற வார்த்தைகள் நியூசிலாந்து வீரர் ஜீத்தன் படேல், கேன் வில்லியம்சன் குறித்து பேசியது. அந்த வார்த்தைகளுக்கான உருவத்தைதான் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் நம் கண் முன் வில்லியம்சன் காட்டினார். ஆனால் இதனை வில்லியம்சன் சிறு வயதிலிருந்தே கடைபிடித்ததுதான் மிகப்பெரும் ஆச்சர்யம்.

நியூசிலாந்தில் வெளிவரும் ஒரு நாளிதழில், ’நான் அடுத்த மாட்டின் கிரூவ்’ என வில்லியம்சன் கூறுவதைப்போல் தலைப்பிட்டு கட்டுரை வெளியிடப்பட்டது. இளம் வயதில் இருந்த வில்லியம்சனை மிகப்பெரும் ஆளுமையோடு ஒப்பிட்டு எழுதியது அவரை பெரிதும் பாதித்தது. அதற்கு பிற்காலத்தில் வில்லியம்சன் எவ்வாறு பதிலடியாய் ஆடி வருகிறார் என்பதைப் பார்ப்போம்.

வில்லியம்சன்
வில்லியம்சன்

பிறக்கும் போதே சகோதரருடன் இரட்டை குழந்தையாய் பிறந்தவர் வில்லியம்சன். ஸ்போர்ட்ஸ் குடும்பத்தில் பிறந்த வில்லியம்சனின் சகோதரிகள் வாலிபாலை விளையாட, வில்லியம்சனோ கால்பந்து, ரக்பி, கிரிக்கெட், கூடைப்பந்து என அனைத்து விளையாட்டுக்களையும் சரியாக கற்றுக்கொண்டார்.

ஆனால் கிரிக்கெட்தான் வில்லியம்சனுக்கு இயற்கையாகவே வருவதைப்போல் திறமையாக அவர் ஆடினார். பள்ளி பருவத்தில் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ, அவர்களுக்கு வில்லியம்சனின் பிரின்சிபால் (principal) ஒரு பரிசு அளிப்பார். தினமும் வெவ்வேறு வீரர்கள் அந்த பரிசினை பெறுவார்கள். ஆனால் வில்லியம்சனுக்கு அது கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், வில்லியம்சன் என்னும் வீரர் வயதிற்கு மீறிய ஒரு ஆட்டத்தை ஆடுவார். தினமும் வில்லியம்சனுக்கு கொடுத்துவிட்டால், மற்றவர்களுக்கு எப்போதும் பரிசு கொடுக்க முடியாது. எனவே வில்லியம்சன் மட்டும் அந்த பரிசு கொடுக்கும் ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

வில்லியம்சன்
வில்லியம்சன்

14 வயதிலேயே சீனியர் கிரிக்கெட்டை ஆடியவர், பள்ளியைவிட்டு விலகியபோது அவர் அடித்த சதங்களின் எண்ணிக்கை 40. 16ஆவது வயதிலேயே முதல்தரப் போட்டிகளில் ஆடியவர், தனது 20ஆவது வயதில் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிவிட்டார்.

இதனைப் பார்த்தவர்கள் அனைவரும் வில்லியம்சனுக்கு இயற்கையாக கிரிக்கெட் விளையாட வருகிறது என்றார்கள், அதற்கு வில்லியம்சன், 'நிச்சயம் இல்லை. இதனை இயற்கை என்பதை எப்படி எடுத்து கொள்ள முடியும். பூமியில் பிறந்தவர்கள் அனைவருமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்தான். ஆனால் திறமை என்பது பயிற்சியால் மட்டுமே வரும். எனக்கு பயிற்சிதான் பொழுதுபோக்கு' என பதில் கூறினார்.

ஒருமுறை சக நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல், 'கேன் வில்லியம்சனும் நானும் பள்ளியில் படிக்கும்போது எதிர் எதிர் அணிகளில் ஆடினோம். எங்கள் அணி, பள்ளி கிரிக்கெட்டில் மிகப்பெரிய அணி. ஆனால் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை மட்டும் மூன்று வருடங்களாக வீழ்த்த முடியவில்லை. அவரை வெளியேற்ற வேண்டும் என்றால், ரிடையர்டு ஹர்ட் மட்டும் வாய்ப்பாக இருந்தது.

வில்லியம்சன்
பவுண்டரிக்கு விரட்டும் வில்லியம்சன்

அந்த பருவத்திலேயே மிகவும் நேர்த்தியாக ஆடும் வீரர் வில்லியம்சன். ஒருமுறை நானும், வில்லியம்சனும் ஒரே அணியில் ஆடினோம். அப்போது தொடக்கம் முதல் இறுதி வரை விக்கெட் விட்டுவிடக் கூடாது என்ற முடிவில், நான் கடைசி பந்தில் ஆட்டமிழந்தேன். முழு ஓவர்களும் பேட்டிங் செய்து 271 ரன்கள் சேர்த்தோம்' என்றார். இதுதான் வில்லியம்சன்...!

வில்லியம்சன்
வில்லியம்சன்

சிறு வயது முதலே அனைவரும் விளையாட வேண்டும் என்றால், வெல்ல வேண்டும் என வில்லியம்சன் சொல்வார். ஆம், வில்லியம்சனுக்கு வெல்வதும், விளையாடுவதும் மட்டுமே பொழுதுபோக்கு. ஆனால், வென்றபின் எந்த உணர்ச்சிகளையும் வெளியில் காட்ட மாட்டார். தோல்வியடைந்தாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டர்.

சிறப்பாக ஆடியதன் விளைவாக நியூசிலாந்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உலகக்கோப்பைத் தொடரில் 17 வயதிலேயே அரையிறுதி வரை அணியை அழைத்துச் சென்றார். அதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு 2010ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டபோது, தனது பிறந்தநாளுக்கு பின் இரண்டு நாட்களில் ஆடிய முதல் போட்டியிலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஆடிய இரண்டாது போட்டியிலும் ரன் எடுக்கவில்லை. பள்ளிப் பருவத்திலும், முதல்தரப் போட்டிகளிலும் இயல்பாக சதங்கள் விளாசிய வில்லியம்சனுக்கு சர்வதேச கிரிக்கெட் சிறப்பாக வரவேற்பு கொடுத்தது. ஆனால் முதல் போட்டியில் டக் அவுட் ஆன ஒருவர் பின்னாட்களில் ’காட் ஆஃப் கிரிக்கெட்’ என பெயர் எடுத்ததை சரித்திரம் பேசிக்கொண்டிருக்கிறது. அதுபோல்தான் தற்போது வில்லியம்சன்... சரித்திரத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறார்...!

வில்லியம்சன்
வில்லியம்சன்

அதன் பின் வங்கதேசத்தில் ஆடியபோதுதான் குறிப்பிடத்தக்க ரன்கள் அடிக்கத் தொடங்கினார். வங்கதேசத்தில் சிறப்பாக ஆடியதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டார். 2010ல் தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் அரங்கில் முதலிடத்தில் இருந்தது. சொந்த மண்ணில் ஆடுவதால் மிகப்பெரிய ஆட்டத்தை பௌலிங் பேட்டிங் என இரண்டிலும் இந்தியர்கள் வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் பந்தயம் கட்டி கொண்டாடினர்.

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் சேவாக் - டிராவிட் இணையின் வலிமையான ஆட்டத்திற்கு பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் சரிந்தது. ஆறாவதுதாக 20 வயதே நிரம்பிய வில்லியம்சன் களமிறங்கினார். அப்போதிருந்து இந்தியாவின் பக்கம் வீசிய காற்று வில்லியம்சன் பக்கம் வீசத் தொடங்கியது. சரியாக 391 நிமிடங்கள் களத்தில் இருந்து 299 பந்துகள் எதிர்கொண்டு 131 ரன்களைக் குவித்தார். எந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் டக் அவுட்டானாரோ அதே அணிக்கு எதிராக நங்கூரம் பாய்ச்சி சதம் விளாசினார்.

அங்கே தொடங்கிய பயணம் எதற்காகவும் எங்கேயும் நிற்கவில்லை. பிரண்ட் ஃபூட் (front foot), பேக் ஃபூட் (back foot) என இரண்டிலும் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்துவார். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் அடித்து வென்றபோதும் மகிழ்ச்சியை அலட்டிக்கொள்ளாமல் வெளிப்படுத்தினார். பின்னர் வளர்ந்துவரும் வீரர் என்ற நிலையிலிருந்து கேப்டன் என்னும் நிலைக்கு உயர்ந்தார்.

வில்லியம்சன்
இரட்டை சதம் விளாசிய வில்லியம்சன்

எதிரணிகளை ஸ்லோ பாய்சன் (slow poison) போல் வேட்டையாடி வந்த வேடனுக்கு கேப்டன்சி என்னும் ஆயுதம் கிடைத்தது. கேப்டன்சியால் இவரது பேட்டிங் திறமை குறையும் என விமர்சனம் செய்தவர்களுக்கு, சதங்களால் பதில் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக நியூசிலாந்து அணியில் ரன் மெஷின் என்ற சொல்லுக்கு ஏற்ற வீரர்கள் உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அடித்து உடைத்தார் வில்லியம்சன் என்னும் மாவீரர்.

வில்லியம்சன்
சதம் விளாசிய கேன்

டெஸ்ட் தொடரில் வகைதொகையில்லாமல் சதங்கள் அடித்தார். தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த பந்துவீச்சை எதிர்கொண்டபோதும் துவண்டு போகாமல் போராடிய வில்லியம்சன், பந்துவீச்சாளர்களை எளிதாக துவண்டு போக வைத்தார்.

விராட் கோலியின் பலம் பவுண்டரி, ஸ்டீவ் ஸ்மித்தின் பலம் இடது பக்கம் அடிக்கும் அன் ஆர்த்தடாக்ஸ் ஷாட்ஸ் (unorthodax shots), ஜோ ரூட் பலம் பெர்ஃபெக்‌ஷன் (perfection) என்றால் வில்லியம்சனின் பலம் சிங்கிள்கள் எடுப்பது. கிரிக்கெட்டில் 'singles wins matches' என்ற கூற்று உண்டு. அதற்கேற்ப சிங்கிள்களை எளிதாக கடத்தும் மேஜிக்கை வில்லியம்சனால் மட்டுமே செய்ய முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் 100 ரன்களையும் சிங்கிள் மட்டுமே ஓடி எடுக்க வேண்டுமென்றால் அது வில்லியம்சனால் மட்டுமே முடியும். இவரது ஆட்டம், அணியின் தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும். தேவையென்றால் டி20 கிரிக்கெட்டை போல் 49 பந்துகளில் சதம் அடிப்பார். தேவையென்றால் டெஸ்ட் போட்டிகளைபோல் நிலைத்து நின்றும் ஆடுவார். அதுதான் வில்லியம்சன் என்னும் வீரனின் குணம்.

எந்த மார்ட்டின் கிரூவுடன் ஒப்பிடப்பட்டு நாளிதழ்கள் எழுதியதோ, அதே மார்ட்டின் கிரூவ்வின் நண்பரால் நியூசிலாந்தின் சிறந்த வீரர் வில்லியம்சன் என்ற வார்த்தைகளை அவர் பெற்றார். இந்த உலகக்கோப்பைத் தொடரின் மிகச்சிறந்த கேப்டன் என்பதோடு, நியூசிலாந்து அணியை தன் தோளில் தூக்கி வைத்து இறுதிப்போட்டி வரை கொண்டு வந்த ஒரே வீரர் வில்லியம்சன். ஏனென்றால் இந்த உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் நான்காவது ஓவரிலேயே வில்லியம்சன் களமிறங்கிவிட்டார்.

பறக்க
மார்ட்டின் - வில்லியம்சன்

உலகக்கோப்பையில் அரையிறுதியோடு தோற்று வெளியேறும் அணி, இவரது வருகைக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதிலும் இந்த முறை மயிரிழையில் கோப்பையை பறிகொடுத்துள்ளது. அதற்கு ஒரே காரணம் வில்லியம்சன் என்னும் நாயகன்.

நியூசிலாந்து என்னும் கிவி பறவைக்கு சிறகு கொடுத்து வேறு எந்த பறவையும் பறக்க முடியாத அளவு உயர பறக்க வைத்தவர்தான் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். இவரது தலைமையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி உச்சாணிகொம்பிற்கு நிச்சயம் செல்லும். பிளாக் கேப்ஸை கெத்தா ஸ்டைலா தலையில் அணிந்துகொள்ள வித்திட்டவர் வில்லியம்சன். வாழ்த்துகள் வில்லியம்சன்.. படைக்கவிருக்கும் சாதனைகளுக்காக...!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.